/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாய் கிஷோர், சஞ்சய்க்கு 'ஜாக்பாட்' * டி.என்.பி.எல்., ஏலத்தில்...
/
சாய் கிஷோர், சஞ்சய்க்கு 'ஜாக்பாட்' * டி.என்.பி.எல்., ஏலத்தில்...
சாய் கிஷோர், சஞ்சய்க்கு 'ஜாக்பாட்' * டி.என்.பி.எல்., ஏலத்தில்...
சாய் கிஷோர், சஞ்சய்க்கு 'ஜாக்பாட்' * டி.என்.பி.எல்., ஏலத்தில்...
ADDED : பிப் 07, 2024 10:47 PM

சென்னை: டி.என்.பி.எல்., தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற பெருமை சாய் கிஷோர், சஞ்சய் யாதவுக்கு கிடைத்தது. இருவரும் தலா ரூ. 22 லட்சத்துக்கு வாங்கப்பட்டனர்.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழக பிரிமியர் லீக் 'டி-20' தொடர் (டி.என்.பி.எல்.,) 2016 முதல் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. இதுவரை முடிந்த 7 சீசனில் சேப்பாக்கம் அணி அதிகபட்சம் 4 முறை (2017, 2019, 2021, 2022) கோப்பை வென்றது. இத்தொடரின் 8 வது சீசன் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
மொத்தம் 675 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சம் 20 வீரர்கள் வரை இடம் பெறலாம் என்ற நிலையில் நேற்று மொத்தம் 62 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
யாருக்கு அதிகம்
சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், ரூ. 22 லட்சத்துக்கு திருப்பூர் அணி வாங்கியது. சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சஞ்சய் யாதவை, ரூ. 22 லட்சம் கொடுத்து திருச்சி அணி வாங்கியது.
டி.என்.பி.எல்., தொடர் வரலாற்றில் வீரர்கள் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது இது தான் முதன் முறை. இதற்கு முன் 2023ல் துவக்க வீரர் சாய் சுதர்சன், ரூ. 21.60 லட்சத்துக்கு கோவை அணி வாங்கி இருந்தது. இதேபோல சஞ்சய் யாதவ், 2023ல் ரூ. 17.60 லட்சத்துக்கு (சேப்பாக்கம்) ஏலம் போனதே அதிகம்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ரூ. 11.25 லட்சத்துக்கு மட்டும் தான் ஏலம் போனார். இவரை திருச்சி அணி வாங்கியது.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை ரூ. 10.50 லட்சம் கொடுத்து திண்டுக்கல் அணி தட்டிச் சென்றது. ஹரிஷ் குமார் (ரூ. 15.40 லட்சம்) சேலம் அணிக்கு சென்றார்.
'டாப்-11' வீரர்கள்
டி.என்.பி.எல்., ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 'டாப்-11' வீரர்கள்.
வீரர் அணி தொகை
சாய் கிஷோர் திருப்பூர் ரூ. 22.00 லட்சம்
சஞ்சய் யாதவ் திருச்சி ரூ. 22.00 லட்சம்
ஹரிஷ் குமார் சேலம் ரூ. 15.40 லட்சம்
அபிஷேக் சேப்பாக்கம் ரூ. 12.20 லட்சம்
நடராஜன் திருச்சி ரூ. 11.25 லட்சம்
விவேக் சேலம் ரூ. 11.00 லட்சம்
சந்தீப் திண்டுக்கல் ரூ. 10.50 லட்சம்
ஹரிஹரன் நெல்லை ரூ. 10.20 லட்சம்
பெரியசாமி சேப்பாக்கம் ரூ. 8.80 லட்சம்
பொய்யாமொழி சேலம் ரூ. 7.25 லட்சம்
மூர்த்தி திருச்சி ரூ. 7.25 லட்சம்
அஷ்வின் வருகை
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடுகிறார். நேற்றைய வீரர்கள் ஏலத்தில் இவர் பங்கேற்றார். இவர் கூறுகையில்,'' ரஞ்சி, கிளப் என எந்த அணிக்காக விளையாடினாலும் ஆர்வத்துடன் பங்கேற்பேன். ஏனெனில் தமிழக கிரிக்கெட்டுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதால் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு, என்னை சிறந்த வீரராக மாற்றிக் கொள்ள முடிந்தது,'' என்றார்.

