ADDED : நவ 02, 2024 09:48 PM

லண்டன்: ஐ.பி.எல்., 'மெகா' ஏலத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறுவது சந்தேகம்.
இந்தியாவில், ஐ.பி.எல்., 18வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் இம்மாதம் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்த ஏலத்தில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆஷஸ் (எதிர்: ஆஸ்திரேலியா), இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக ஏலத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு சென்னை அணிக்காக ஒரு சில போட்டிகளில் பங்கேற்ற ஸ்டோக்ஸ், ஆஷஸ் தொடருக்காக இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., 17வது சீசன், 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்கவில்லை. தவிர இம்முறை, ஏலத்தில் ஒப்பந்தமாகும் வீரர், சரியான காரணமின்றி விலகினால், இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏலத்தில் இருந்து ஸ்டோக்ஸ் விலகலாம்.
