ADDED : ஜூலை 09, 2026 11:25 PM

சென்னை: டி.என்.பி.எல்., கிரிக்கெட் 10வது சீசன் வரும் ஆக. 4ல் துவங்குகிறது.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 9 சீசன் நடந்துள்ளன. இதில் சேப்பாக்கம் அணி 4 முறை (2017, 2019, 2021, 2022) சாம்பியன் ஆனது.
இதன் 10வது சீசன் வரும் ஆக. 4ல் துவங்குகிறது. இதற்கான அட்டவணை வெளியிட்டப்பட்டது. இரண்டு கட்டமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. முதற்கட்ட போட்டிகள் ஆக. 4-15ல், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கவுள்ளது. இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளன. இதில் ஆக. 18 முதல் 22 வரை லீக் போட்டிகள் நடக்கும். 'பிளே-ஆப்' சுற்றுக்கான தகுதிச் சுற்று-1, 'எலிமினேட்டர்', தகுதிச் சுற்று-2 போட்டிகள் முறையே ஆக. 23, 24, 26ல் நடத்தப்படுகிறது. பைனல், ஆக. 28ல் நடக்கும்.
தவிர, 11 நாட்கள் தலா 2 போட்டி நடத்தப்படும். 10 நாட்கள் தலா ஒரு போட்டி நடக்கும். முதல் லீக் போட்டியில் (ஆக. 4) திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் அணி, தனது முதல் லீக் போட்டியில் (ஆக. 5) நெல்லை அணியை சந்திக்கிறது. கடைசி லீக் போட்டியில் (ஆக. 22) மதுரை, நெல்லை அணிகள் விளையாடுகின்றன.
