/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இரண்டாவது 'வேகம்' யாரு * முகேஷ்-ஆகாஷ் போட்டி
/
இரண்டாவது 'வேகம்' யாரு * முகேஷ்-ஆகாஷ் போட்டி
ADDED : பிப் 21, 2024 10:55 PM

ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் முகமது சிராஜுடன் இணைந்து களமிறங்கப் போகும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் மீண்டு வந்த இந்திய அணி அடுத்த இரு போட்டியில் வெற்றி பெற, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் நாளை ராஞ்சியில் துவங்க உள்ளது.
பும்ரா 'ரெஸ்ட்'
இதற்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதல் 3 டெஸ்டில் 80.5 ஓவர் பந்து வீசி, 17 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஐ.பி.எல்., தொடர், உலக கோப்பை 'டி-20' தொடர் வரவுள்ளது. இதையடுத்து பும்ரா பணிச்சுமையை குறைக்கும் வகையில், ராஞ்சி டெஸ்டில் ஓய்வு தரப்பட்டுள்ளது.
இவருக்குப் பதில் பெங்கால் வீரர் முகேஷ் குமார் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் பிஹார் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இவர், 50 ரன்னுக்கு 10 விக்கெட் (4+6) சாய்த்தார். தவிர, தற்போது அணியில் உள்ள ஆகாஷ் தீப், 30 முதல் தர போட்டிகளில் 104 விக்கெட் சாய்த்து, தனது பலத்தை நிரூபித்துள்ளார்.
யாருக்கு வாய்ப்பு
தற்போது பும்ரா இல்லாத நிலையில், முகமது சிராஜுடன் இணைந்து ராஞ்சி டெஸ்டில் களமிறங்கும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நேற்றைய பயிற்சியில் டிராவிட் கண்காணிப்பில், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். ஆகாஷ் தீப் அதிக வேகத்துடன் பந்துவீசியது, டிராவிட்டை கவர்ந்துள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சி செய்தனர். சீனியர் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா பந்துவீச்சில் ஈடுபட்டனர். மறுபக்கம் சுழல் வீரர் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சில் பேட்டிங் பயிற்சி செய்தார்.
நான்கு 'சுழல்'
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் என நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெறலாம். இதில் அக்சர் படேல், பேட்டர் என்ற அடிப்படையில் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராகுல் இல்லை
இந்திய அணி 'மிடில் ஆர்டர்' வீரர் ராகுல். முதல் டெஸ்டில் 86, 22 ரன் எடுத்த இவர், வலது தொடை காயத்தால் அடுத்த இரு டெஸ்டில் விலகினார். ராஞ்சி டெஸ்டில் விளையாடுவார் என நம்பப்பட்டது. ஆனால் போதிய 'பிட்னஸ்' இல்லாததால் மீண்டும் விலகியுள்ளார். உடற்தகுதியை பொறுத்து ஐந்தாவது டெஸ்டில் (மார்ச் 7-11) களமிறங்கலாம்.

