
லண்டன்: லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும். நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ், ஆனந்த் தலைமையிலான காங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
இதில் ஐந்து முறை உலக சாம்பியன் இந்தியாவின் ஆனந்த், மும்பை சார்பில் களமிறங்கிய மேக்சிம் வாசியர் (பிரான்ஸ்) மோதிய போட்டி டிரா ஆனது. மற்றொரு போட்டியில் காங்கஸ் வீராங்கனை வைஷாலி, மும்பை அணியின் கோனேரு ஹம்பி மோதினர். இப்போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. இவர் 65 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
முடிவில் காங்கஸ் அணி 12-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த போட்டி முடிவில் அலாஸ்கன் நைட்ஸ் அணி (21 புள்ளி), ஆல்பைன் (18 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.

