/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனா * கைகொடுத்த குகேஷ் வெற்றி
/
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனா * கைகொடுத்த குகேஷ் வெற்றி
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனா * கைகொடுத்த குகேஷ் வெற்றி
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனா * கைகொடுத்த குகேஷ் வெற்றி
ADDED : செப் 19, 2024 10:50 PM

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரில் குகேஷ் வெற்றி கைகொடுக்க, இந்திய அணி, சீனாவை வீழ்த்தியது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு ஏழாவது சுற்றில் இந்திய அணி, வலிமையான சீனாவை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா களமிறங்கினர். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் இல்லாமல் களமிறங்கியது சீனா.
முதலில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். தொடர்ந்து ஹரிகிருஷ்ணா மோதிய போட்டியும் டிரா ஆக, ஸ்கோர் 1.5-1.5 என சம நிலையில் இருந்தது. இந்தியாவின் குகேஷ், சீனாவின் வெய் இக்கு எதிரான போட்டியில் 18 வது நகர்த்தலில் பின் தங்கினார்.
அடுத்து சுதாரித்துக் கொண்ட இவர், வெற்றிக்காக போராடினார். சுமார் 4 மணி நேரம், 40 நிமிட போராட்டத்துக்குப் பின், ஒரு வழியாக வெய் இ தோல்வியை ஒப்புக் கொண்டார்.
குகேஷ் வெற்றி பெற்றதை அடுத்து, இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 14 புள்ளியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஈரான் (13), உஸ்பெகிஸ்தான் (12) அணிகள் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.
திவ்யா கலக்கல்
இந்திய பெண்கள் அணி ஏழாவது சுற்றில், ஜார்ஜியாவை சந்தித்தது. முதலில் திவ்யா, ஹரிகா தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். வைஷாலி, வந்திதா இருவரும் வெற்றி பெற்றனர்.
முடிவில் இந்திய அணி 3.0-1.0 என இத்தொடரில் ஏழாவது வெற்றி பெற்றது. 14 புள்ளியுடன் முதலிடத்தில் தொடர்கிறது. போலந்து (12), கஜகஸ்தான் (12) அணிகள் அடுத்து உள்ளன.

