தாய் நாட்டுக்காக விளையாடுங்கள் * முன்னாள் ஹாக்கி வீரர் உருக்கம்
தாய் நாட்டுக்காக விளையாடுங்கள் * முன்னாள் ஹாக்கி வீரர் உருக்கம்
ADDED : ஆக 08, 2026 11:04 PM

புதுடில்லி: '' உலக கோப்பை ஹாக்கியில் தாய் நாட்டுக்காக விளையாடுங்கள். எப்படியும் வென்றாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரர்கள் களமிறங்க வேண்டும்,'' என முன்னாள் வீரர் அசோக் குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து, பெல்ஜியத்தில் 16வது உலக கோப்பை ஹாக்கி, வரும் ஆக. 14-30ல் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில், ஆக. 15, சுதந்திர தினத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற போதும், உலக கோப்பையில் இந்தியா பெரிதாக சாதிக்கவில்லை. 1971ல் மூன்றாவது, 1973ல் இரண்டாவது இடம் பெற்றது. 1975ல் மலேசியாவில் நடந்த பைனலில், சுர்ஜித் சிங், அசோக் குமார் கோல் கைகொடுக்க, இந்தியா, 2-1 என பாகிஸ்தானை சாய்த்து, உலக கோப்பை வென்றது.
இதற்கு பின் கடந்த 51 ஆண்டுகளாக எவ்வித பதக்கமும் வென்றதில்லை. இம்முறை ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கி உள்ளது.
வெற்றி முக்கியம்
இதுகுறித்து முன்னாள் வீரர் அசோக் குமார் 76, கூறியது:
உலக கோப்பை தொடர் அரையிறுதியில் (1971) தோற்ற போது, பயிற்சியாளர் பல்பிர் சிங் சீனியர் அழுதார். 1973ல் வெள்ளி வென்றாலும், தங்கப்பதக்கத்தை தவற விட்டது ஏமாற்றமாக இருந்தது. 1975ல் பங்கேற்ற போது, தேசத்தை எங்கள் தாயாக நினைத்து, தொடர் முழுவதும் விளையாடினோம். நீங்களும் அதேபோல செயல்பட வேண்டும். எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற உணர்வுடன் களமிறங்க வேண்டும்.
வெற்றி, தோல்வி என்பது, உங்களுடையது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் சேர்ந்தது என நினைக்க வேண்டும். இந்த எண்ணம் மட்டும் இருந்தால் போதும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உள்ளுணர்வு தானாகவே ஏற்பட்டு விடும்.
பந்தை கட்டுப்படுத்துவது, சக வீரர்களுக்கு 'பாஸ்' செய்வது, தாக்குதலில் இறங்குவது என எந்த முடிவாக இருந்தாலும், களத்தில் விரைவாக முடிவு எடுத்து விளையாட வேண்டும்.
ஏனெனில், 51 ஆண்டு கால காத்திருப்பு என்பது மிக நீண்டது. இம்முறை எப்படியும் ஒரு பதக்கத்தை வென்றாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே லட்சியம்
கடந்த 1975 தொடரில் ஒரே லட்சியத்துடன் விளையாடினோம். கடந்த இரு தொடரில் நழுவவிட்ட தங்கத்தை இம்முறை வென்றாக வேண்டும் என திட்டமிட்டோம். ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா என எந்த அணியும் எங்களை தடுக்க முடியவில்லை. இதுபோல இம்முறை செயல்படுங்கள்.
அஸ்லாம் ஷேர் கான் 73,
இந்திய அணி முன்னாள் வீரர்
