/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் தவிப்பு
/
இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் தவிப்பு
ADDED : அக் 25, 2024 11:08 PM

புதுடில்லி: உலக சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியாமல் தவித்த இந்திய மல்யுத்த நட்சத்திரங்களுக்கு நிம்மதி பிறந்தது. இவர்களது பிரச்னைக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தீர்வு கண்டார்.
அல்பேனியாவில் அக். 28ல் உலக சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் துவங்குகிறது. இந்தியா சார்பில் மன்ஷா பன்வாலா (65 கிலோ எடை பிரிவு), மன்சி அஹலாவாத் (59), கீர்த்தி (55), உதித் (61), பர்விந்தர் சிங் (79), ரோகித் தாகியா (82) உட்பட 12 பேர் பங்கேற்க இருந்தனர். ஆனால், அரசியல் தலையீடு காரணாக, இத்தொடரில் இருந்து விலகுவதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) திடீரென அறிவித்தது. டபிள்யு.எப்.ஐ., மீது விதித்த தடையை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் நீக்க மறுக்கிறது. மறுபக்கம் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க, புதிதாக உயர் மட்ட கமிட்டியை அமைக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் தயங்குகிறது. இதனால் மல்யுத்த கூட்டமைப்பில் குழப்பம் நீடிக்கிறது.
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் நேற்று டில்லியில் உள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா வீட்டு முன் திரண்டனர்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கலம் வென்ற மன்ஷா பன்வாலா கூறுகையில்,''நாங்கள் ஹரியானாவில் இருந்து டில்லி வந்துள்ளோம். 10-12 ஆண்டு கால கடின உழைப்பிற்கு பின் தான் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம். தற்போது இந்த வாய்ப்பை வீணாக்குகின்றனர். பயிற்சியை துவக்க வேண்டிய நேரத்தில் மத்திய அமைச்சரின் வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டிய கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களை அல்பேனியா அனுப்ப தவறினால், போராட்டத்தை துவக்குவோம்,''என்றார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,''நீதிமன்ற வழக்குகள் தொடர்பான பொறுப்பை ஏற்பதாக மத்திய அமைச்சர் மாண்டவியா உறுதி அளித்தார். இதனால் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை நீக்குவது பற்றி பரிசீலிப்பதாக கூறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நமது நட்சத்திரங்கள் திட்டமிட்டபடி நாளை காலை அல்பேனியா புறப்படுவர்,''என்றார்.

