/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அவனி 'சுட்டதெல்லாம்' தங்கம் * பாராலிம்பிக்கில் வரலாறு
/
அவனி 'சுட்டதெல்லாம்' தங்கம் * பாராலிம்பிக்கில் வரலாறு
அவனி 'சுட்டதெல்லாம்' தங்கம் * பாராலிம்பிக்கில் வரலாறு
அவனி 'சுட்டதெல்லாம்' தங்கம் * பாராலிம்பிக்கில் வரலாறு
ADDED : ஆக 30, 2024 11:05 PM

பாரிஸ்: பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார் அவனி.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் துப்பாக்கிசுடுதல் (எஸ்.எச்.1) போட்டி நடந்தது. இந்தியா சார்பில் அவனி லெஹரா, மோனா அகர்வால் பங்கேற்றனர்.
முதலில் 17 பேர் பங்கேற்ற தகுதிச்சுற்று போட்டி நடந்தது. 'டாப்-8' வீராங்கனைகள் மட்டும் பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் அவனி லெஹரா, 625.8 புள்ளி எடுத்து 2வது இடம் பெற்றார். மோனா அகர்வால், 623.1 புள்ளியுடன் 5வது இடம் பிடித்தார். இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.
மோனா வெண்கலம்
பைனலில் மொத்தம் 24 வாய்ப்பு (10+14) தரப்பட்டன. ஸ்டேஜ் 1ல் 10 வாய்ப்பு தரப்பட்டன. இதில் அவனி 2வது, மோனா 6வது இடம் பெற்றனர். பின் ஸ்டேஜ் 2ல் ('எலிமினேஷன்') 14 வாய்ப்பு தரப்பட்டன. இதில் இரு இந்திய வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டனர்.
20 வாய்ப்பு முடிவில் மோனா (208.1) முதலிடத்துக்கு முன்னேற, அவனி (208) 2வது இடத்தில் இருந்தார். 22வது வாய்ப்பு முடிவில் சற்று ஏமாற்றிய மோனா, 218.6 புள்ளி எடுத்து மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.
தங்கம் எப்படி
இந்தியாவின் அவனி (229.3), தென் கொரியாவின் யுன்ரி லீ (229.3) சம புள்ளியில் இருந்தனர். தங்கம், வெள்ளி யாருக்கு என முடிவு செய்யும் கடைசி இரு வாயப்பில் அவனி, 9.9, 10.5 என சுட்டார். யுன்ரி 10.7, 6.8 என ஏமாற்றினார். முடிவில் 249.7 புள்ளியுடன் அவனி தங்கம் கைப்பற்றினார்.
இது பாராலிம்பிக் சாதனையாக அமைந்தது. முன்னதாக டோக்கியோவில் அவனி, 249.6 எடுத்திருந்தார். யுன்ரி (246.8) வெள்ளி வென்றார்.
முதல் வீராங்கனை
இதையடுத்து பாராலிம்பிக் வரலாற்றில் அடுத்த போட்டியில் (2021, 2024) தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார். தவிர, பாராலிம்பிக்கில் அதிக (3) பதக்கம் (2021 டோக்கியோவில் தங்கம், வெண்கலம், 2024ல் தங்கம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
முதல் முறை
பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் துப்பாக்கிசுடுதலில் (எஸ்.எச்.1) அவனி, மோனா பதக்கம் வென்றனர். பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் ஒரே பிரிவில் இரு இந்திய இந்தியர் பதக்கம் வென்றது இது தான் முதன் முறை.
மணிஷ் நார்வல் 'வெள்ளி'
ஆண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் (எஸ்.எச்.1) போட்டி நடந்தது. இதற்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் மணிஷ் நார்வல், 565 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ருத்ரான்ஷ் 561 புள்ளி எடுத்து 9வது இடம் பெற்று, வெளியேறினார். பின் நடந்த பைனலில் மணிஷ் நார்வல், 234.9 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர்.
பிரீத்தி வெண்கலம்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டம் (டி 35 பிரிவு) பைனல் நேற்று நடந்தது. இந்தியா சார்பில் பிரீத்தி பால் 23, களமிறங்கினார். இவர், 14.21 வினாடி நேரத்தில் வந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்த சீசனில் இவரது சிறந்த ஓட்டமாகவும் இது அமைந்தது. இதையடுத்து பாராலிம்பிக் தடகளம் 'டிராக்' வரலாற்றில் (ஓட்டம்) பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் பிரீத்தி.
ஒரே நாளில் '4'
பாராலிம்பிக் 3வது நாளான நேற்று இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது.
பதக்க மழை
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அவனி லெஹரா 22. தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கினார். இடுப்பு பகுதிக்கு கீழ் பாதிக்கப்பட, 'வீல் சேர்' வீராங்கனையாக மாறினார். தன்னம்பிக்கையுடன் போராடி, பாரா துப்பாக்கிசுடுதலில் அசத்தினார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் 10 மீ., ஏர் ரைபிள், எஸ்.எச் 1 பிரிவில் தங்கம், 50 மீ., ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். தற்போது மீண்டும் தங்கம் வென்றுள்ளார்.
முதல் வெண்கலம்
ராஜஸ்தானை சேர்ந்தவர் மோனா அகர்வால் 37. 9 மாத குழந்தையாக இருந்த போது போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக, இவரால் நடக்க முடியாமல் போனது. பின் பாரா துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றார். டில்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார். பாரிசில் தனது முதல் பாராலிம்பிக் வெண்கலம் வென்றுள்ளார்.
வட்டு எறிதலில் ஏமாற்றம்
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவின் சாக்சி கசானா, அதிகபட்சம் 21.49 மீ., துாரம் எறிந்து 8வது இடம் பிடித்து ஏமாற்றினார். மற்றொரு வீராங்கனை கரம் ஜோதி, 20.22 மீ., துாரம் எறிந்து, 9வது இடம் பெற்றார்.
காலிறுதியில் சரிதா
பெண்களுக்கான வில்வித்தை (காம்பவுண்டு) 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சரிதா, மலேசியாவின் ஜன்னாட்டன் மோதினர். இதில் சரிதா 138-124 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பவினா ஜோடி தோல்வி
பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் பவினா படேல், சோனல்பென் ஜோடி, தென் கொரியாவின் யங் ஜங், சங்ஹே ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 1-3 (5-11, 6-11, 11-9, 6-11) என தோல்வியடைந்தது.
இந்தியா 'ஐந்து'
படகு வலித்தல் 2000 மீ., கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியா சார்பில் அனிதா, நாராயணா ஜோடி பங்கேற்றது. தகுதிச்சுற்று 1ல் இந்திய ஜோடி 8 நிமிடம், 6.84 வினாடி நேரத்தில் வந்து 5வது இடம் பிடித்தது. 'ரெப்பிசாஜ்' சுற்றில் பங்கேற்க தகுதி பெற்றது.
அர்ஷத் எப்படி
ஆண்களுக்கான சைக்கிளிங் 3000 மீ., தனிநபர் போட்டியில் இந்தியாவின் அர்ஷத் ஷெய்க், 4 நிமிடம், 20.949 வினாடி நேரத்தில் வந்து கடைசி இடம் (9வது) பிடித்து வெளியேறினார்.