/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
எடை மாறலாம்...எண்ணம் மாறுமா * லவ்லினாவின் ஒலிம்பிக் இலக்கு
/
எடை மாறலாம்...எண்ணம் மாறுமா * லவ்லினாவின் ஒலிம்பிக் இலக்கு
எடை மாறலாம்...எண்ணம் மாறுமா * லவ்லினாவின் ஒலிம்பிக் இலக்கு
எடை மாறலாம்...எண்ணம் மாறுமா * லவ்லினாவின் ஒலிம்பிக் இலக்கு
ADDED : ஏப் 23, 2024 10:57 PM

புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும். மீண்டும் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என லவ்லினா தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா(69 கிலோ பிரிவு) வெண்கலம் வென்று அசத்தினார். இந்த ஆண்டு நடக்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக்கிலும்(ஜூலை 26-ஆக.11) சாதிக்க காத்திருக்கிறார். இம்முறை 69 கிலோ எடை பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் 75 கிலோ பிரிவில் தான் லவ்லினா பங்கேற்க வேண்டும்.
இது குறித்து லவ்லினா கூறியது:
எடை பிரிவு மாற்றப்பட்ட பிறகு எனது செயல்பாடு திருப்தியாக உள்ளது. 2023ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றேன். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது உட்பட முக்கிய போட்டிகளில் முத்திரை பதித்தேன். 69 கிலோ பிரிவில் பங்கேற்ற போது, எடையை சீராக வைக்க சிரமப்பட்டேன். உணவு கட்டுப்பாடு காரணமாக, உடல் அளவில் பலவீனமாக இருந்தேன். தற்போது 75 கிலோ பிரிவில் பங்கேற்பதால், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள முடிகிறது. இதனால் வலுவாக உணர்கிறேன். எதிர்த்து மோதுபவரை சாய்க்கும் அளவுக்கு பலம் பெற்றுள்ளேன். எனது தசைகள் வலுவடைந்துள்ளன.
ஒலிம்பிக்கில் ஏற்கனவே 75 கிலோ பிரிவு இருப்பதால், பாரிசில் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். உலகின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனைகளை சந்திக்க நேரிடும். சிறப்பாக செயல்பட்டு மீண்டும் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது ஆட்ட நுணுக்கத்தில் மாறுதல் செய்துள்ளேன். தற்காப்பு ஆட்டத்திற்கு பதிலாக தாக்குதல் பாணிக்கு மாறியுள்ளேன்.
தியானம் முக்கியம்
ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் போது அதிக நெருக்கடி ஏற்படும். இதனை தவிர்த்து, குத்துச்சண்டை கோதாவில் அமைதியான மனநிலையில் இருக்க விரும்புகிறேன். இதற்காக தியானம், மூச்சுப் பயிற்சி, பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன். ஊக்கம் தரும் புத்தகங்களை படிக்கிறேன். இதன் காரணமாக மனதளவில் வலிமையாக உணர்கிறேன்.
இவ்வாறு லவ்லினா கூறினார்.

