தமிழ் குறித்து பேச தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அ.தி.மு.க., விமர்சனம்
தமிழ் குறித்து பேச தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அ.தி.மு.க., விமர்சனம்
UPDATED : ஜன 26, 2026 12:13 AM
ADDED : ஜன 26, 2026 12:12 AM

மதுரை: ''ஒரு முறை கூட உலகத் தமிழ் மாநாடு நடத்தாத தி.மு.க.,வுக்கு தமிழ் மொழி குறித்து பேசத் தகுதியில்லை,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகளின் கனவை நனவாக்கியது, அ.தி.மு.க., தான்.
மதுரையில் உலகத் தமிழ் சங்கத்தையும்; முதன் முதலில் தமிழ் பல்கலையையும் உருவாக்கியவர், எம்.ஜி.ஆர்., உலகத் தமிழ் சங்க கட்டடத்துக்காக, ஜெயலலிதா நிதி ஒதுக்கினார்.
பல்கலைகளில் தமிழ் இருக்கை அமைக்க, பழனிசாமி நிதி ஒதுக்கினார்.
சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை அண்ணாதுரை; மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆர்.,; தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதா ஆகியோர் நடத்தினர்.
ஆனால், தமிழ் தமிழ் என கூறும் தி.மு.க., ஆட்சியில், ஒரு உலகத் தமிழ் மாநாடு கூட நடத்தவில்லை.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தது அந்தக் கட்சி. சட்ட சபையில் உண்மையை உலகிற்கு சொல்ல மறுப்பதால், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கவர்னர் உரை புறக்கணிக்கப்பட்டு, சபாநாயகர் உரையாக மாறி விட்டது.
உண்மையை சொன்னால், கவர்னரை நீக்க தீர்மானம் கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டால், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அச்சுறுத்துகின்றனர்.
மாநாடு நடத்தியதையும், சுற்றுப்பயணம் சென்றதையும் சாதனையாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். எது சாதனை, எது வேதனை என 2026 தேர்தலில் மக்கள் பதில் அளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

