சபலென்கா போர்க்கொடி * பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் புறக்கணிப்பா
சபலென்கா போர்க்கொடி * பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் புறக்கணிப்பா
ADDED : மே 05, 2026 11:19 PM

ரோம்: ''கிராண்ட்ஸ்லாம் தொடர் வருமானத்தில் அதிக பங்கு வேண்டும். இல்லையெனில் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும்,'' என சபலென்கா தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 18--ஜூன் 7ல் பாரிசில் நடக்க உள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை இம்முறை ரூ. 678 கோடியாக உயர்த்தப்பட்டது.
ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 31 கோடி, இரண்டாவது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 15 கோடி பரிசு கிடைக்கும். ஆனால், இதற்கு டென்னிஸ் உலகின் 'நம்பர்-1' இடத்திலுள்ள வீரர் சின்னர் (இத்தாலி), வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன
கடந்த 2025ல் பிரெஞ்ச் ஓபன் தொடரின் மொத்த வருமானம் ரூ. 4,404 கோடி. இது 2024ஐ விட 14 சதவீதம் அதிகம். ஆனால் பரிசுத்தொகை 5.4 சதவீதம் தான் உயர்த்தப்படுகிறது.
வீரர், வீராங்கனைகளுக்கு தரப்படும் வருமான பகிர்வு, 2024ல் 15.5% ல் இருந்து 2026ல் 14.9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2026ல் வருமானம் ரூ. 4,460 கோடியாக அதிகரிக்கும் நிலையில், வருமானத்தில் கூடுதல் பங்கு, பென்சன் வழங்க வேண்டும். இல்லையெனில் ஏ.டி.பி., டபிள்யு.டி.ஏ., தொடர்களுடன், கிராண்ட்ஸ்லாம் தொடரையும் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சபலென்கா கூறுகையில்,'' எங்களைப் போன்ற வீரர், வீராங்கனைகள் இல்லாமல், போட்டியும் நடக்காது, ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் இருக்காது. எங்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். இது நிறைவேறாத பட்சத்தில் தொடரை புறக்கணிப்போம். நமது உரிமைகளுக்காக போராடுவதற்கு, இது தான் ஒரே வழி,'' என்றார்.
இது அதிகம்
போலந்தின் இகா ஸ்வியாடெக் கூறுகையில்,'' பிரெஞ்ச் ஓபன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொடருக்கு முன் இதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். மற்றபடி தொடரை புறக்கணிப்பது என்பது அதிகபட்ச முடிவு,'' என்றார்.
