ADDED : மே 06, 2025 11:15 PM

ரோம்: ஊக்கமருந்து தடையில் இருந்து மீண்ட சின்னர், இன்று ரோம் தொடரில் களமிறங்குகிறார்.
இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர் 23. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். உலகின் 'நம்பர்-1' வீரரான இவரிடம், கடந்த 2024, மார்ச் மாதம் ஊக்கமருந்து சோதனை நடந்தது.
இதில் தடை செய்யப்பட்ட மருந்து உடலில் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த சின்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சர்வதேச டென்னிஸ் ஏஜென்சி, அப்படியே விட்டுவிட்டது.
ஆனால், சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) ஒரு ஆண்டு தடை விதிக்க கோரி, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அடுத்து நடந்த சமரச முயற்சியில், சின்னர் மூன்று மாத தடையை (பிப். 9 முதல் மே 4 வரை) ஏற்றுக் கொண்டார்.
இதற்கு ஜோகோவிச் (செர்பியா), அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கோப்பை வென்ற பின், இன்று சொந்த மண்ணில் (ரோம்) துவங்கும் தொடரில் மீண்டும் களமிறங்குகிறார். முதல் சுற்றில் இவருக்கு 'பை' வழங்கப்பட்டது. நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளார்.
இதற்கான பயிற்சியை சின்னர் துவங்கினார். இதைக் காண 5000 ரசிகர்கள் திரண்டனர். உள்ளூர் 'டிவி' சானல் சின்னர் பயிற்சியை நேரடி ஒளிபரப்பு செய்தது.