/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சைக்கிளில் பைக் மோதி செக்யூரிட்டி பலி
/
சைக்கிளில் பைக் மோதி செக்யூரிட்டி பலி
ADDED : பிப் 24, 2025 11:29 PM
மறைமலைநகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 39. மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே, ஜி.எஸ்.டி.,சாலையைக் கடக்க முயன்ற போது, தாம்பரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த கே.டி.எம்., இருசக்கர வாகனம், ராஜா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
கே.டி.எம்., இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த யாஷ் சர்மா,23, என்பவருக்கு, இடது கால் மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டது.
பின்னால் அமர்ந்து வந்த ஆதித்யன் நாயர்,22, என்பவருக்கு தாடை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டது.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் யாஷ் சர்மா, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், ஆதித்யன் நாயர் சென்னை, அமிர்தா கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. விபத்து குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.