/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாரியத்தை ஏமாற்றி கூடுதல் இணைப்பு கண்டுபிடித்து ரூ.1.78 கோடி வசூல்
/
வாரியத்தை ஏமாற்றி கூடுதல் இணைப்பு கண்டுபிடித்து ரூ.1.78 கோடி வசூல்
வாரியத்தை ஏமாற்றி கூடுதல் இணைப்பு கண்டுபிடித்து ரூ.1.78 கோடி வசூல்
வாரியத்தை ஏமாற்றி கூடுதல் இணைப்பு கண்டுபிடித்து ரூ.1.78 கோடி வசூல்
ADDED : மே 07, 2024 10:39 PM
சென்னை மாநகராட்சியில், 13.35 லட்சம் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் உள்ள நிலையில், தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வரியாக, 13.96 லட்சம் பேரும், கட்டணமாக, 9.13 லட்சம் பேரும் செலுத்துகின்றனர்.
குடிநீர், கழிவுநீரை பொறுத்தவரை வீட்டு இணைப்பு, வணிகம் சார்ந்த இணைப்பு மற்றும் தற்காலிக இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் தற்காலிக இணைப்பு, பழைய வீட்டை இடித்து புதிதாக கட்டும் காலத்தில் வழங்கப்படுவது.
இதற்கு, 25,000 ரூபாய் செலுத்தினால், ஒரு கை பம்ப் குடிநீர் இணைப்பு மற்றும் ஒரு கழிப்பறை வசதியில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.
இந்நிலையில், கட்டடம் கட்ட 'பிளான்' வாங்கும் போது, புது இணைப்புக்கான சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தி, புது இணைப்பு வாங்க வேண்டும்.
ஆனால் சிலர் வங்கிக் கடன், சொத்து பரிமாற்ற தேவைக்காக பழைய வீட்டை இடித்து மாடி வீடு கட்டியிருப்பர். இதற்காக புது இணைப்பு பெற்று, முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணத்தை செலுத்தியிருப்பர்.
அடுத்த நிதியாண்டிற்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு புதிய வரி செலுத்த வேண்டும். ஆனால், பழைய கட்டடத்தின் ரசீதை வைத்து குறைந்த வரியும், கட்டணமும் செலுத்துவர். புதிய வீட்டிற்கு நிர்ணயித்த வரியை மறைத்துவிடுவர்.
இதனால், குடிநீர் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், வீட்டு பயன்பாட்டிற்கு இணைப்பு பெற்று, வணிக பயன்பாட்டிற்கு அதை பயன்படுத்துகின்றனர். இதிலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க, குடிநீர் வாரியத்தில் போதிய ஊழியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மாநகராட்சியின் வரி மதிப்பீட்டை வைத்து, குடிநீர் வாரியம் வரி வசூலிக்கிறது.
வீடு, வணிக பயன்பாடு குறித்த துல்லியமான பட்டியல், குடிநீர் வாரியத்திடம் இல்லை. ஆனால், மின் வாரியத்திடம் 99 சதவீத நுகர்வோரின் பட்டியல் துல்லியமாக இருப்பதாக, குடிநீர் வாரியம் நம்புகிறது.
இதனால், மின் வாரியத்திடம் இருந்து குறிப்பிட்ட நுகர்வோரின் முகவரியை பெற்று, குடிநீர் வாரிய நுகர்வோரின் முகவரியுடன் ஒப்பிட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, மின் வாரியத்திடம் இருந்து, 36 ஆயிரத்து 740 நுகர்வோரின் முகவரியை பெற்று, மண்டல வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. இதை வைத்து, குடிநீர் வாரிய ஊழியர்கள், நேரடியாக சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த பணி, கடந்த 2022ல் துவங்கியது. தற்போது, 100 சதவீதம் ஒப்பீடு பணி முடிவடைந்தது. இதில், மொத்தமுள்ள, 36 ஆயிரத்து 740 பேரின் விபரங்களை ஒப்பிட்டதில், 2,563 பேர், வணிக பயன்பாட்டு வரியை மறைத்தது தெரிந்தது.
இதனால், 1.78 கோடி ரூபாய் குடிநீர் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இந்த தொகையை மொத்தமாக வசூலிக்கும் பணியை கடந்த ஆண்டு துவங்கியது. இந்த பணிகள், இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இது போன்ற முறைகேடு நடப்பதை விரைந்து கண்டறிவதற்காக, வணிக பயன்பாடு, இரு வரி மதிப்பீடு மோசடி குறித்து அறிய, ஆண்டுதோறும் ஒப்பீடு செய்யும் பணியை நடத்தவும், வாரியம் முடிவு செய்துள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின் வாரிய ஊழியர்கள், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக சென்று, மின் கணக்கீடு செய்வதால், வீடா அல்லது வணிக பயன்பாடா என தெரிந்து விடும்.
இதன் அடிப்படையில், மின் வாரிய முகவரியை பெற்று, குடிநீர், கழிவுநீர் இணைப்புடன் ஒப்பீடு செய்ததில், 2,563 பேரின் இணைப்பில் வித்தியாசம் கண்டுபிடித்தோம்.
இதன்படி, மின் வாரியத்தில் எப்போதிருந்து வணிக பயன்பாட்டில் உள்ளதோ, அப்போதிருந்து, வணிக பயன்பாடு அடிப்படையில் நோட்டீஸ் வழங்கி, 1.78 கோடி ரூபாய் குடிநீர் வரி மற்றும் கட்டணம் வசூலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

