/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 20,000 வேப்பங்கன்று மண் வளம் பாதுகாக்க நடவடிக்கை
/
செங்கையில் 20,000 வேப்பங்கன்று மண் வளம் பாதுகாக்க நடவடிக்கை
செங்கையில் 20,000 வேப்பங்கன்று மண் வளம் பாதுகாக்க நடவடிக்கை
செங்கையில் 20,000 வேப்பங்கன்று மண் வளம் பாதுகாக்க நடவடிக்கை
ADDED : செப் 01, 2024 11:53 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 73 ஊராட்சிகளில் முதல் முறையாக, விவசாய நிலங்களில் வேப்ப மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை, நீலகிரி மாவட்டங்களை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய, விவசாயிகளுக்கு இலவசமாக வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், வேப்ப மரக்கன்றுகள் நடுதலை விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தப்படுகிறது. அசாடிராக்டின் மூலப்பொருட்களைக் கொண்ட வேம்பிலிருந்து கிடைக்கும் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்பபடுத்தும். வேப்பிலை பசுந்தழை உரமாகவும் பயன்படுகிறது.
வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில், பத்து லட்சம் வேப்ப மரக்கன்றுகள், வேளாண் காடுகள் திட்டத்தில், இலவசமாக வினியோகிக்கப்படும். இதற்காக, 2 கோடி ரூபாய் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக, விவசாய நிலங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், மண் வளம் பாதிக்கப்படுகிறது.
இயற்கை பூச்சிகொல்லி
இதனை தவிர்க்க, இயற்கை விவசாயத்திற்கு, விவசாயிகளை படிப்படியாக அரசு கொண்டு வருகிறது. மாவட்டத்தில் முதல் முறையாக, விவசாய நிலங்களில் 20,000 வேப்ப மரக்கன்றுகள் நடவு செய்ய, 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில், வேளாண் நிலங்கள் மற்றும் பண்ணைக் குட்டைகளின் வரப்புகளில், வேப்ப மரக்கன்றுகள் நட வேண்டும். ஒரு விவசாயிக்கு, ஏக்கருக்கு 60 மரக்கன்றுகள் என, 5 ஏக்கருக்கு 300 மரக்கன்றுககள் வழங்க உள்ளனர்.
மரக்கன்றுகள் நடவு செய்த விபரங்களை, உதவி வேளாண் அலுவலர்கள் UATT என்ற செயலில், முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நடவு செய்த நாளிலிருந்து, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என, இரண்டு ஆண்டுகளுக்கு, மரக்கன்றுகளின் உயிர்ப்புத் தன்மை விபரங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உழவர் செயலியில் பதிவு செய்த பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வேப்ப மரம் இயற்கை பூச்சிகொல்லி, வேப்பிலை, வேப்ப எண்ணெய் ஆகியவை பல்வேறு வகையான பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டவை. இவை பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி
வேப்ப இலைகள் மண்ணில் விழுந்து உரமாகி, மண் வளத்தை அதிகரிக்கிறது. வேப்பிலையில் உள்ள நொதிகள், பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
இதன் வாயிலாக, பயிர்கள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். வேப்ப மரம் ஆழமாக வேர் பிடிக்கும் தன்மை கொண்டது. இது, மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
வறட்சியான பகுதிகளில், பயிர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன. இலைகளை பசுமை உரமாக பயன்படுத்தி, மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம். இயற்கை வழியில் பூச்சிகளை கட்டுப்படுத்தி, மண் வளத்தை அதிகரிக்கிறது.
பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே, விவசாயிகள் வேப்ப மரத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கலாம் என, வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில், விவசாய நிலங்களில் வேப்ப மரக்கன்றுகள் நடவு செய்ய, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. வட்டார அளவில் உள்ள வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, இலவசமாக வேப்ப மரக்கன்றுகளை பெற பதிவு செய்யலாம்.
- ஆர்.அசோக், வேளாண் இணை இயக்குனர், செங்கல்பட்டு