/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் நான்கு ஆண்டுகளாக அகற்றப்படாத ஆக்கிரமிப்பு கட்டடம் காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு
/
ஊரப்பாக்கத்தில் நான்கு ஆண்டுகளாக அகற்றப்படாத ஆக்கிரமிப்பு கட்டடம் காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு
ஊரப்பாக்கத்தில் நான்கு ஆண்டுகளாக அகற்றப்படாத ஆக்கிரமிப்பு கட்டடம் காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு
ஊரப்பாக்கத்தில் நான்கு ஆண்டுகளாக அகற்றப்படாத ஆக்கிரமிப்பு கட்டடம் காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு
ADDED : ஆக 29, 2024 01:29 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர், அபிராம் நகர், வைகை நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்போர் நலச்சங்கம் துவங்கப்பட்டு, முறையாக பதிவு செய்து செயல்பட்டு வருகிறது.
இந்த நலச்சங்கத்திற்கு சொந்தமான இடம், பிரியா நகர் - 1ல் உள்ளது. அதில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ள்ன.
இந்த இடத்தின் பூங்கா அருகில் உள்ள காலி இடத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, மூன்று தளங்களுடன் வீடு கட்டியிருந்தார். அதில், அவர் வசிப்பது போக மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
இது தொடர்பாக, குடியிருப்போர் நல சங்கத்தினர் சார்பில், கடந்த 2015ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நான்காண்டுகளுக்கு மேல் நடந்தது.
தொடர்ந்து, 2020ம் ஆண்டு, மே மாதம், இந்த இடம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சொந்தமானது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை சங்கத்திற்கு ஒப்படைக்குமாறும், வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், 2021ல் வண்டலுார் தாசில்தாராக இருந்த ஆறுமுகம் தலைமையில், வருவாய்த் துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் முன்னிலையில், ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றும் பணி நடந்தது.
இந்நிலையில், தாசில்தார் ஆறுமுகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதோடு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பாதியில் நிற்கிறது. அதன்பின், இரு தாசில்தார்கள் வந்து மாறியும், ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது, அந்த கட்டடத்தில், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், அதனால், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் இதுவரை பயனில்லை.
இது குறித்து, ஊரப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் த.ஆனந்தி கூறியதாவது:
சங்கத்துக்கு சொந்தமான இடத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, அனுபவித்து வந்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நீதிமன்றத்தை நாடி அந்த இடத்தை மீட்டோம்.
ஆனால், அதில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை முழுமையாக அகற்றி தருவதில், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். இந்த கட்டடம் வலுவிழந்த நிலையில் உள்ளதால், மழைக்காலத்தில் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், அந்த கட்டடத்தில், இரவு நேரங்களில் கஞ்சா புகைத்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. அதனால், அந்த கட்டடத்தின் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு கட்டடத்தை முற்றிலுமாக அகற்றி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், தனிநபர் ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை முற்றிலும் இடித்து அகற்றுவது தொடர்பாக, அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு கட்டடம் முழுமையாக அகற்றப்படும்.
- புஷ்பலதா,
வண்டலுார் தாசில்தார்.
ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றும் பணியில் ஈடுபட்ட நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. அதன்பின், ஊராட்சியில் பொக்லைன் இயந்திரம் இல்லாததால், ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றப்படும்.
- கலைச்செல்வம்,
வட்டார வளர்ச்சி அலுவலர்,
காட்டாங்கொளத்துார் ஒன்றியம்.