/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனைத்து ரயில்களிலும் 4 ஆண்டுகளில் 'கவச்' கருவி
/
அனைத்து ரயில்களிலும் 4 ஆண்டுகளில் 'கவச்' கருவி
ADDED : ஆக 08, 2024 01:38 AM

சென்னை:அதிவேகத்தின்போது தானியங்கி 'பிரேக்' வாயிலாக, ரயில்களை நிறுத்த உதவும், 'கவச்' அமைப்பு, அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ரயில்வே அறிக்கை:
பாதுகாப்பான வேகத்தையோ, ஆபத்தான சிக்னல்களை மீறுவதையோ கண்காணித்து, தானாக பிரேக் பிடித்து, ரயிலை நிறுத்த உதவும், 'கவச்' எனும் தானியங்கி அமைப்பை, ரயில்வே நிர்வாகம் நிறுவி வருகிறது.
இந்த அமைப்பை, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருத்தி வெற்றி பெற்றுள்ளன.
நம் நாட்டில், மும்பை புறநகர் ரயில்களில், 1986ல் பொருத்தி சோதிக்கப்பட்டது. 2006ல், வடகிழக்கு ரயில்வேயில் சோதிக்கப்பட்டது.
கடந்த, 2010 முதல் 2016 வரை, ஆக்ராவிலிருந்து சென்னை வரும் ரயில்கள் மற்றும் கோல்கட்டா மெட்ரோ உள்ளிட்டவற்றில் சோதிக்கப்பட்டது.
இவற்றில் உள்ள நிறை, குறைகளை மேம்படுத்த வேண்டிய நிலை, பாதை கட்டமைப்புகள் குறித்து தொடர் ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையில், 2020ல், 'கவச்' தொழில்நுட்பம் ஏற்கப்பட்டது.
தற்போது, மத்திய ரயில்வேயில், 1,465 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்படும், 144 ரயில் இன்ஜின்களில் கவச் பொருத்தப்பட்டுள்ளது.
டில்லி - மும்பை, டில்லி - ஹவுரா பாதைகளில், 'ஆப்டிகல் பைபர் கேபிள்' பதிப்பது, சிக்னல் கோபுரங்களை நிறுவுவது, ரயில் இன்ஜின்களில் கவச் கருவி பொருத்துவது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
அடுத்த நான்காண்டுகளில், அனைத்து இன்ஜின்களிலும் 'கவச்' அமைப்பு பொருத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.