/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகர் பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் திறக்க ஏற்பாடு
/
செங்கை புறநகர் பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் திறக்க ஏற்பாடு
செங்கை புறநகர் பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் திறக்க ஏற்பாடு
செங்கை புறநகர் பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் திறக்க ஏற்பாடு
ADDED : மார் 08, 2025 11:37 PM

செங்கல்பட்டு,மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், புதிய பேருந்து நிலையம் அருகில், மேற்பார்வை மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் ஆகியவை அமைந்துள்ளன.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு நகரில் திருமணம், விழாக்காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்குச் சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பின், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'டெண்டர்' விடப்பட்டது. புதிய பேருந்து நிலைய பணியை, கடந்த 2023 ஆண்டு நவ., மாதம் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இங்கு, புதிய பேருந்து நிலையம், கடைகள், போக்குவரத்து பணிமனை கட்டடங்கள் கட்டுமான பணி, கடந்த ஜூலை மாதத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, தரைமட்டத்தில் இருந்து, 16 அடி உயர்த்துவதற்கு மண் தேவைப்படுகிறது. இதனால், பொன்விளைந்தகளத்துார் ஏரியில் இருந்து மண் எடுக்க, கனிமவளத் துறையிடம் ஒப்பந்ததாரர்கள் அனுமதி கோரினர்.
இதை பரிசீலித்து, கனிம வளத்துறையும் அனுமதி வழங்கியது. இதையடுத்து, பேருந்து நிலைய பகுதியில், தரை மட்டத்தில் இருந்து மண் கொட்டி, உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இப்பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர். தற்போது, பேருந்து நிலைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்து, வரும் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணிகள், 55 சதவீதம் முடிந்துள்ளன. மற்ற கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
- பொறியாளர்கள்,
சி.எம்.டி.ஏ.,
சென்னை.