/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
/
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 26, 2024 02:43 AM

கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், ஊரப்பாக்கம் மற்றும் வண்டலுார் ரயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளங்கள் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை கையகப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வந்தனர்.
பேருந்து முனையம் அருகில் உள்ள சங்கரா பள்ளி எதிரில், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து ஆதனுார் செல்லும் மேம்பாலத்தின் அருகில், தண்டவாளத்தை ஒட்டியவாறு அளவீடு செய்ய முயன்றனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர், எங்களுக்கு பட்டா உள்ளது. நாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என, தெரிவித்தனர். மேலும், ரயில்வே துறை அதிகாரிகள், ஆவணங்களை எடுத்து வராததால், நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.
இது குறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:
வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வர இருக்கிறது. ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
மீதம் உள்ள பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை, நேற்று முன்தினம் ஆரம்பித்தோம். அப்போது, ரயில்வே துறை அதிகாரிகள், இடம் தொடர்பான வரைபடத்தை எடுத்து வரவில்லை.
அதனால், அளவீடு செய்யும் பணி, நேற்று முன்தினம் நடைபெறவில்லை. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரயில்வேக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.