/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் ஸ்கூட்டருடன் ரூ.4.10 லட்சம் 'ஆட்டை'
/
செங்கையில் ஸ்கூட்டருடன் ரூ.4.10 லட்சம் 'ஆட்டை'
ADDED : பிப் 27, 2025 11:50 PM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்,46. செங்கல்பட்டு அடுத்த வல்லம், ராட்டினம் கிணறு, மதுராந்தகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு உதவியாக, அவரது மகன் ராஜேஷ் கிருஷ்ணன்,19, என்பவர் இருந்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி ராஜேஷ் கிருஷ்ணன், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழைய இரும்பு கடைகளுக்குச் சென்று பணம் வசூல் செய்துள்ளார். வசூலித்த 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை, தன் 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தின் சீட்டின் அடிப்பகுதியில் வைத்துக் கொண்டு, இரவு வீட்டிற்கு வந்தவர், பணத்தை எடுக்காமல் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த அனைவரும் ஏற்கனவே வெளியூர் சென்ற நிலையில், இவர் மட்டும் துாங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை, பணத்துடன் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.