/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவமனை மழைநீர் வடிகால் பணி அரைகுறை செய்யூரில் கண்ணில் நிழலாடும் கடந்தாண்டு வெள்ளம்
/
மருத்துவமனை மழைநீர் வடிகால் பணி அரைகுறை செய்யூரில் கண்ணில் நிழலாடும் கடந்தாண்டு வெள்ளம்
மருத்துவமனை மழைநீர் வடிகால் பணி அரைகுறை செய்யூரில் கண்ணில் நிழலாடும் கடந்தாண்டு வெள்ளம்
மருத்துவமனை மழைநீர் வடிகால் பணி அரைகுறை செய்யூரில் கண்ணில் நிழலாடும் கடந்தாண்டு வெள்ளம்
ADDED : மே 09, 2024 12:56 AM

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில், செய்யூர் அரசு மருத்துவமனை உள்ளது. இதுவே, நல்லுார், புத்துார், சித்தாற்காடு, தேவராஜபுரம், அம்மனுார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.
அரசு மருத்துவமனை கட்டடங்கள் தாழ்வான பகுதியில் இருப்பதால், ஆண்டுதோறும் பருவமழையின் போது கனமழை பெய்தால், மருத்துவமனையில் மழைநீர் தேங்கி, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், செய்யூர் சித்தேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், மருத்துவமனை ஓரத்தில் செல்லும் வடிகால்வாய் வழியாக வயல்வெளிக்கு சென்றடைகிறது.
மருத்துவமனை ஓரத்தில் செல்லும் வடிகால்வாய் சிறிதாக உள்ளதாலும், புதிதாக பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய் மருத்துவமனை ஓரத்தில் செல்லும் வடிகால்வாயை விட உயரமாக இருப்பதாலும், தண்ணீர் செல்ல வழி இன்றி, மழைநீர் மருத்துவமனை வளாகத்தில்தேங்குகிறது.
கடந்த ஜன., மாதம் பெய்த மழையில், மருத்துவமனையில் மழைநீர் தேங்கியபோது, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்து, மருத்துவமனையை சுற்றி உள்ள வடிகால்வாய்களை அளவீடு செய்து அகலப்படுத்த உத்தரவிட்டார்.
அதோடு, புதிதாக பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயை தாழ்வாக அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
ஆனால், நான்கு மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை மருத்துவமனை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்க, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவமழைக்கு முன் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.