/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் மறுவாழ்வு பெற்ற நாட்டார் குளம்
/
தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் மறுவாழ்வு பெற்ற நாட்டார் குளம்
தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் மறுவாழ்வு பெற்ற நாட்டார் குளம்
தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் மறுவாழ்வு பெற்ற நாட்டார் குளம்
ADDED : ஜூன் 10, 2024 01:01 AM

சென்னை : அடையாறு மண்டலம் 177வது வார்டு, வேளச்சேரியில், 1 ஏக்கர் பரப்பில் நாட்டார்குளம் உள்ளது. இந்த குளத்தில் கட்டட கழிவுகள், குப்பை கொட்டப்பட்டு வந்ததால் சாலை சாலை மட்டத்தில் இருந்தது. இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அப்போது, நீர்நிலைகளை பாதுகாக்க 'நம் நாளிதழ்' முன்வந்தது.
'களமிறங்குவோம்... நமக்கு நாமே' என, பொது நல சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து அறிவிப்பு, விழிப்புணர்வு செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து, நாட்டார் குளத்தை மீட்க, வேளச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன. குளத்தை துார்வாரி, 10 அடி ஆழப்படுத்தி, அதில், 3 அடி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தனர்.
இருபது ஆண்டுகளுக்குபின், 2020ம் ஆண்டு பருவமழையில் குளம் நிரம்பியதால், வேளச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நமக்கு நாமே' திட்டத்தில், 55 லட்சம் ரூபாயில், குளத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றி கரையை பலப்படுத்தி, ஆழப்படுத்தி, மைய பகுதியில் கிணறு, நடைபாதை கட்டமைப்புடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
வருவாய்த்துறை சார்பில் குளம் அளக்கப்பட்டது. குளத்தை சுற்றி உள்ள சிலர், பணியை தொடர விடாமல், ஓராண்டாக இடையூறு செய்தனர்.
இதுகுறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், இடையூறு செய்பவர்கள் மீது போலீசில் புகார் அளித்து பணியை துவங்கினர்.
இதன்பின், பணி வேகமெடுத்தது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணியையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வேளச்சேரி பகுதியில் பல ஆக்கிரமிப்புகள் 'தினமலர்' நாளிதழ் செய்தியால் மீட்கப்பட்டு உள்ளன. அதேபோல், நாட்டார்குளத்தையும் மீட்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் குளத்தை ஆக்கிரமிக்க முடியாது. சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீரும் அதிகரிக்கும்' என்றனர்.