/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் செயல்படாத நேர காப்பளர் அறை
/
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் செயல்படாத நேர காப்பளர் அறை
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் செயல்படாத நேர காப்பளர் அறை
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் செயல்படாத நேர காப்பளர் அறை
ADDED : ஆக 30, 2024 12:25 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், பேருந்து நிலையத்தில் பயணியரின் நலன் கருதி அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளது.
அதேபோல், பயணியருக்காக, பேருந்து நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அந்த இருக்கைகள் தற்போது சேதமடைந்துள்ளன.
இதனால் திருப்போரூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர், குடிநீர் வசதி இல்லாமலும், போதிய இருக்கை வசதி இல்லாமலும் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், அங்கு பேருந்துகளை ஒழுங்குபடுத்தவும், பயணியருக்கு பேருந்து புறப்படும் நேரம் குறித்து தகவல் தெரிவிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், நேர காப்பாளர் அறை உள்ளது. ஆனால், அது கடந்த ஓராண்டாக, திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால், பேருந்துகள் புறப்படும் நேரம், வரும் நேரம் குறித்த விபரங்களை பெற முடியாமல், பயணியர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், பேருந்து நிலைய வளாகத்தில், பேருந்து வெளியேறும் இடத்தின் அருகே, செயல்பட்டில் இல்லாத அம்மா குடிநீர் விற்பனை மையம் உள்ளது.
இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். இவை ஏதும் இல்லாமல், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, பயணியருக்கு இடையூறாக உள்ளது.
எனவே, பயணியர் நலன் கருதி, திருப்போரூர் பேருந்து நிலையத்தில், தேவையான அடிப்படை வசதிகளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.