/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
/
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
ADDED : ஜூலை 09, 2024 06:15 AM
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க சீசன் டிக்கெட் பெறவோ அல்லது கவுன்டர்களில் புதுப்பிக்கவோ வரும் முன்பதிவில்லாத பயணியரிடம், மொபைல் எண்ணை சேகரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு, சென்ட்ரல் -- திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில், தினமும் 550 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் இருந்து, ரயில்களில் தினமும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக, சென்னை ரயில்வே கோட்டத்தில், 160 கி.மீ., வரை, சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த வகையில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர், சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீசன் டிக்கெட்டுகளை பெறவோ அல்லது கவுன்டர்களில் புதுப்பிக்கவோ வரும் முன்பதிவில்லாத பயணியரிடம், மொபைல் போன் எண்ணை சேகரிக்க, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பெறும் பயணியரிடம், மொபைல் போன் எண்கள் பெறப்பட்டன.
தற்போது, முன்பதிவு செய்யப்படாத பயணியரிடமிருந்தும் மொபைல் போன் எண்ணை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கு, பயணியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பயணியர் சிலர் கூறுகையில், 'மொபைல் போன் எண் பெறுவது கட்டாயம் எனக் கூறி, கவுன்டர்களில் இதுபோன்ற அடிப்படை விபரங்களை சேகரிப்பது, பயணியரின் தனியுரிமையை மீறுவதாகும்' என்றனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மானிய விலையில் சீசன் டிக்கெட்டுகளைப் பெறும் பயணியரிடமிருந்து, அடிப்படை தகவல்களை சேகரிப்பதே இதன் நோக்கம்' என்றனர்.