/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி கட்டுமான பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
அங்கன்வாடி கட்டுமான பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : மே 28, 2024 06:37 AM

செங்கல்பட்டு : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பாக்கம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கிராமத்தில், நியாய விலைக்கடை அருகில், அங்கன்வாடி மையம் சொந்த கட்டடத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இதில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் தாய்மார்களுக்கு இணை உணவு, உடல் எடை பரிசோதனை உள்ளிட்டவை இங்கு செய்யப்பட்டு வந்தது.
இந்த கட்டடம் சிதிலமடைந்து, இடியும் நிலையில் இருந்ததால், அங்கன்வாடி மையம் அருகில் உள்ள தனியார் வாடகை கட்டடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம், புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
துவக்கத்தில் வேகமாக நடந்த பணிகள், அதன் பின் கிடப்பில் போடப்பட்டதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், அந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதாக, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
எனவே, அங்கன்வாடி மைய கட்டடத்தை விரைந்து கட்டி முடித்து, கிராம மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.