/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதார் மையத்தில் இருக்கை வசதி கூடுதலாக ஏற்படுத்த கோரிக்கை
/
ஆதார் மையத்தில் இருக்கை வசதி கூடுதலாக ஏற்படுத்த கோரிக்கை
ஆதார் மையத்தில் இருக்கை வசதி கூடுதலாக ஏற்படுத்த கோரிக்கை
ஆதார் மையத்தில் இருக்கை வசதி கூடுதலாக ஏற்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 28, 2025 11:45 PM

மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. இங்குள்ள நகராட்சி அலுவலக கட்டடம் பழுதானதால், மதுராந்தகம் -- சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம், புதிதாக நகராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.
பழைய நகராட்சி கட்டட வளாகத்தில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் 'டிஜிட்டல்' சேவைகள் துறையின் கீழ், ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.
அதில், ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்தல், புதுப்பித்தல், மொபைல் போன் எண் மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல், முகவரி திருத்தம் செய்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன.
மதுராந்தகம் நகராட்சி மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களும், இங்கு பயனடைந்து வருகின்றனர்.
நாள்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் என, பலதரப்பட்ட மக்களும், ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு, மூன்று பேர் அமரும் வகையில், ஒரு இருக்கை மட்டுமே உள்ளது.
இதனால், ஆதார் மையத்தின் எதிரே, தரைப் பகுதியில் பொதுமக்கள் அமர வேண்டியுள்ளது. நகராட்சி குப்பை வண்டிகள், நகராட்சி பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள், ஆதார் மையம் உள்ள பகுதியில் நிறுத்தப்படுகின்றன.
அதனால், போதிய அளவு இட வசதியின்றி, கால் கடுக்க இந்த குறுகலான இடத்தில் காத்திருக்கின்றனர்.
குப்பை வண்டிகள் துாய்மை செய்யப்படாமல் நிறுத்தப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசி, அங்குள்ளவர்கள் தவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஆதார் மைய வளாகத்தை துாய்மைப்படுத்தி, கூடுதல் இருக்கை வசதிகள் ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.