/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தையை கடத்துவதாக சந்தேக நபர் மீது வழக்கு
/
குழந்தையை கடத்துவதாக சந்தேக நபர் மீது வழக்கு
ADDED : மே 15, 2024 10:26 PM
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், கடுக்களூர் கிராமம், அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜித், 19. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில், சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி எதிரே, பி.எஸ்.மூர்த்தி நகர் 'டி -பிளாக்' அருகே அமர்ந்திருந்தார்.
நேற்று இரவு 10:00 மணியளவில், அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடும் போது, அவர்களுடன் விளையாட முற்பட்டார். அப்போது, சிறுவர்கள் பயந்து ஓடியுள்ளனர்.
மேலும் ப்ரித்தி என்பவர், கையில் ஏழு மாத குழந்தையுடன் இருந்த போது, அஜித் குழந்தையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்தோர், குழந்தையை கடத்த வந்துள்ளார் என நினைத்து, அஜித்தை நையப்புடைத்து உள்ளனர்.
பின் அவர், ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், அஜித் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், மனநலம் பாதித்த நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மது போதையிலும் இருந்துள்ளார். பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த அவரை, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.