/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகனங்கள் நிறுத்தத்துக்கான அரசின் கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்ய அவகாசம்
/
வாகனங்கள் நிறுத்தத்துக்கான அரசின் கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்ய அவகாசம்
வாகனங்கள் நிறுத்தத்துக்கான அரசின் கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்ய அவகாசம்
வாகனங்கள் நிறுத்தத்துக்கான அரசின் கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்ய அவகாசம்
ADDED : ஏப் 23, 2024 05:32 AM
சென்னை, : போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுப்பதற்கான கொள்கையை, மூன்று மாதங்களில் இறுதி செய்ய, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன.
இதனால், சாலையின் அகலம் குறைகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; விபத்தும் நடக்கிறது. வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2016ல், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நகர்ப்புற மேம்பாட்டு கொள்கையை வகுத்தது. அந்த விதிகளை கடைபிடிப்பதில்லை. பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், வாகனங்கள் நிறுத்தம் தொடர்பான கொள்கையை வகுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் கொள்கையை தாக்கல் செய்யவில்லை.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடைசி வாய்ப்பு வழங்குவதாகவும், இல்லையென்றால், அபராதம் விதிப்பதாகவும், முதல் பெஞ்ச் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும், வாகனங்களை சட்டவிரோதமாக ஆங்காங்கே நிறுத்துவதை தடுக்கும் வகையில், வரைவு கொள்கையை அரசு வகுத்துள்ளதாகவும், இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 11ம் தேதி அரசின் தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரிகள் கூடி விவாதித்ததாகவும், அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிளீடர் தெரிவித்தார்.
வரைவு கொள்கையை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதில் மாற்றம், திருத்தம் இருந்தால் அவற்றை சரி செய்து இறுதி செய்த பின் வெளியிடுவதாகவும், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.
அரசு தரப்பில் அளித்த விளக்கத்தை பதிவு செய்த முதல் பெஞ்ச், அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுப்பதற்கான கொள்கையை இறுதி செய்ய, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியது.
கொள்கை வகுத்த பின், அதை கண்டிப்புடன் பின்பற்றவும், அரசுக்கு அறிவுறுத்தியது.

