/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவள்ளூாில் 60 டிக்கெட் பண்டல் திருட்டு
/
திருவள்ளூாில் 60 டிக்கெட் பண்டல் திருட்டு
ADDED : ஜூன் 30, 2024 11:09 PM
திருவள்ளூர் : திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை செங்குன்றத்தில் இருந்து வந்த தடம் எண்: 505 என்ற இரண்டு மாநகர பேருந்துகள் வந்தன.
இதில், ஒரு பேருந்தில் ஓட்டுனராக கண்ணன், 48, நடத்துனராக சேகர், 40, ஆகியோரும், மற்றொரு பேருந்தில் ஓட்டுனராக சிவகுமார், 46, நடத்துனராக தாமோதரன், 45, ஆகியோரும் பணிபுரிந்தனர்.
இரு பேருந்துகளையும் அருகருகே நிறுத்தி விட்டு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அறைக்கு சென்று, நேரத்தை பதிவு செய்து திரும்பி வந்து பார்த்தபோது, ஓட்டுனர் இருக்கையின் அருகே பையில் வைக்கப்பட்டிருந்த 12 ரூபாய், 15 ரூபாய், 41 ரூபாய் அடங்கிய 31 டிக்கெட் பண்டல்கள் திருடு போனது தெரிந்தது.
மற்றொரு மாநகர பேருந்தில் இருந்தும் 29 டிக்கெட் பண்டல்கள் மாயமாகி இருந்தன. பதறிப்போன இரு பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் நேரக் காப்பாளருக்கு தகவல் அளித்தனர்.
திருடு போன 60 டிக்கெட் கட்டுகளின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என ஓட்டுனர், நடத்துனர்கள் தெரிவித்தனர்.
நடத்துனர்கள் சேகர், தாமோதரன் ஆகிய இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இதனால் இரண்டு பேருந்துகளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
இச்சம்பவம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.