/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேடவாக்கம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுக்கு வழியில்லை
/
மேடவாக்கம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுக்கு வழியில்லை
மேடவாக்கம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுக்கு வழியில்லை
மேடவாக்கம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுக்கு வழியில்லை
ADDED : ஜூலை 25, 2024 11:41 PM
மேடவாக்கம்:தாம்பரம் மாநகர காவல் ஆணையகரம், 2022ல் உருவாக்கப்பட்டபோது அதன் கீழ் 20 காவல் நிலையங்கள் இருந்தன.
தொடர்ந்து, நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கரணை காவல் நிலையத்தை பிரித்து, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஊராட்சிகளை உள்ளடக்கி, மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.
கோவிலம்பாக்கத்தில் கட்டப்பட்ட மேடவாக்கம் புதிய காவல் நிலையம், இம்மாதம் 18ல் திறக்கப்பட்டது. இந்நிலையத்தில், போதிய வசதிகள் இல்லாததால், புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புகார்தாரர்கள் கூறியதாவது:
மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தில், வழக்கு பராமரிப்பு ஏடுகள், எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கான கணினி உள்ளிட்ட சாதனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
இதனால், புகார் அளிப்போர் பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்று வழக்கு பதிந்து, மீண்டும் இங்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இந்த காவல் நிலையம் கோவிலம்பாக்கத்தில் உள்ளதால், மேடவாக்கத்திலிருந்து 3 கி.மீ., பயணித்து இங்கு வந்து புகார் அளித்தால், மீண்டும் பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்று புகாரை பதிவு செய்து, மீண்டும் கோவிலம்பாக்கம் வரவேண்டி உள்ளது.
இதனால், கூடுதல் அலைச்சல், கால விரயம் ஏற்படுகிறது. தவிர, புதிய காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆகிய இரு பிரிவுகள் மட்டுமே இயங்குகின்றன. போக்குவரத்து பிரிவு இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், மேடவாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவையும் துவங்கி, எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட வழக்கு பதிவுக்கான ஏடுகள் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிளாம்பாக்கம் காவல் நிலையத்துடன், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 22 காவல் நிலையங்கள் உள்ளன.