ADDED : ஆக 03, 2024 09:45 PM
மறைமலைநகர்:பாண்டிச்சேரி ஒழுக்கரை அடுத்த தட்டஞ்சாவடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 40. இவர், பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 'எய்ச்சர்' வாகனத்தில், செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் கொரியர் பொருட்களை டெலிவரி செய்ய வந்தார்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, ஜி.எஸ்.டி., சாலையில் மகேந்திரா சிட்டி சந்திப்பு அருகே வந்தபோது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த 'பாரத் பென்ஸ்' கனரக வாகனம் மோதியது.
இதில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.