ADDED : ஆக 23, 2024 11:46 PM

மறைமலைநகர்:செங்கல்பட்டு அடுத்த திருமணி ஊராட்சி அரசு பள்ளி அருகே, கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் திருமணி, ஜானகிபுரம்,மோசிவாக்கம் உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்த நிலையில், கட்டத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் சுவர்களில் ஈரம் படிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விண்ணப்பிக்க வரும் கிராம மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.
எனவே, சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கிராம நிர்வாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.