/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரவுநேர மது கூடமான நடைபாதை மேம்பாலம்
/
இரவுநேர மது கூடமான நடைபாதை மேம்பாலம்
ADDED : ஆக 06, 2024 02:31 AM
மறைமலை நகர்:திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில், மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே, சாலையை கடக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதனை, மறைமலை நகர் ரயில் நிலையம் வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான பயணியர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைபாதை முறையாக பராமரிக்கப்படாததால், பல இடங்களில் 'டைல்ஸ்' பெயர்ந்து காணப்படுகிறது.
படிக்கட்டுகளின் இருபுறமும், அதிக அளவில் குப்பை சேர்ந்து காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. நடைபாதை மேல் அமர்ந்து மது அருந்தும் மது பிரியர்கள் காலி பாட்டில்களை இங்கேயே வீசி செல்கின்றனர்.
இதன் காரணமாக, மறைமலை நகர் தொழிற்சாலைகளில், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர், அச்சத்துடன் நடைபாதையில் ஏறி கடக்கின்றனர். இதனைத் தவிர்க்க, பலர் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்கின்றனர்.
எனவே, இந்த நடைபாதையை சுத்தம் செய்யவும், இரவில் மது அருந்துவோரை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.