/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்ணீரை சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டம் திரிசூலம் கல்குவாரி - 1ல் நடைமுறைக்கு வந்தது
/
தண்ணீரை சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டம் திரிசூலம் கல்குவாரி - 1ல் நடைமுறைக்கு வந்தது
தண்ணீரை சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டம் திரிசூலம் கல்குவாரி - 1ல் நடைமுறைக்கு வந்தது
தண்ணீரை சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டம் திரிசூலம் கல்குவாரி - 1ல் நடைமுறைக்கு வந்தது
ADDED : ஏப் 20, 2024 10:29 PM
பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டலத்தில், கோடை கால குடிநீர் பிரச்னையை தீர்க்க, கல்குவாரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வினியோகிக்கும் திட்டத்தில், திரிசூலம் கல்குவாரி - 1ல் சுத்திகரிப்பு செய்யும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாகக்கம் பகுதிகளில், பாலாறு படுகையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, தாம்பரம் பகுதிக்கு வினியோகிக்கப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் எஞ்சியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லபாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் மூலம் தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர். அதேநேரத்தில் குடிநீருக்காக, மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவாகிறது.
அதனால், பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதிகளில் உள்ள கல்குவாரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பல்லாவரம் மண்டல மக்களுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து, மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதிகளில் உள்ள மூன்று கல்குவாரி பள்ளங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தண்ணீரை எடுத்து 'கிங் இன்ஸ்டிடியூட்' மையத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆய்வில், குடிப்பதற்கு உகந்தது என முடிவு வந்ததை அடுத்து, மூன்று பள்ளங்களிலும், 12.50 கோடி ரூபாய் செலவில், சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி, 2023ல் துவங்கியது.
மூவரசம்பட்டில் பணிகள் முடிந்து, 2023 மார்ச்சில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அங்கிருந்து நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் குடிநீரை, கச்சேரி மலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, சுற்றியுள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கின்றனர்.
தொடர்ந்து, மற்ற இரண்டு குவாரிகளில், சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதில், திரிசூலம் கல்குவாரி - 1ல் பணிகள் முடிந்து, தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து வினியோகிக்கும் பணி, தற்போது துவங்கியுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீர், பாரதி நகர், ஈஸ்வரி நகர் தொட்டிகளில் நிரப்பி, மூன்று நாட்களுக்கு ஒரு முறை மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
குவாரி தண்ணீர் பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து, இப்பகுதிகளுக்கான மெட்ரோ குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக, திரிசூலம் - 2ல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்த குவாரியிலும் பணிகள் முடிந்து, விரைவில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

