/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா தலமாக மேம்படுமா நின்னக்கரை ஏரி? மறைமலை நகரில் எதிர்பார்ப்பு
/
சுற்றுலா தலமாக மேம்படுமா நின்னக்கரை ஏரி? மறைமலை நகரில் எதிர்பார்ப்பு
சுற்றுலா தலமாக மேம்படுமா நின்னக்கரை ஏரி? மறைமலை நகரில் எதிர்பார்ப்பு
சுற்றுலா தலமாக மேம்படுமா நின்னக்கரை ஏரி? மறைமலை நகரில் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 26, 2024 02:41 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி நடுவே பரந்து விரிந்துள்ள நின்னக்கரை ஏரியை துார் வாரி, சுற்றுலாவுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும் என, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர், நகரின் மையத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நின்னக்கரை ஏரி, 118 பரப்பளவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மழைக் காலத்திலும், இந்த ஏரி முழுதும் நிரம்புகிறது.
நகரமயமாக்கல் காரணமாக, இந்த பகுதியில் விவசாயம் வழக்கொழிந்ததால், கோடைக்காலங்களிலும் ஏரியில் தண்ணீர் முழுமையாக இருக்கும். கோடைக் காலங்களில் தண்ணீர் இருப்பதால், வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன.
கோடை காலங்களில் அதிக அளவில் இந்த ஏரிக்கு நாரை கொக்கு, நீர்வாத்து உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வருகின்றன. வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயத்திற்கு வரும் பறவைகள், நின்னக்கரை, திருக்கச்சூர் ஏரிகளுக்கும் வருகின்றன.
பறவைகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ள இங்கு, போதிய மரங்களோ, மணல் திட்டுகளோ இல்லை. மேலும், ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் தடங்கள் செல்வதும், நாளுக்கு நாள் கழிவுநீர் ஏரியில் கலப்பதும், குப்பை கொட்டப்படுவதும், பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏரிக்கரையை பலப்படுத்தி, சுற்றிலும் மரங்கள் மற்றும் ஏரியின் நடுவே மணல் திட்டுகள் அமைக்க வேண்டும்.
மேலும், சுற்றுலா தலத்திற்கு ஏற்ப ஏரியை மேம்படுத்த வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:.
கடந்த 2011ம் ஆண்டு, இந்த ஏரியில் அலங்கார விளக்குகள், நவீன கழிப்பறை வசதி, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் நகராட்சி சார்பில் நடைபாதை பூங்கா அமைக்கப்பட்டது.
நாளடைவில் பூங்கா 'குடி'மகன்களின் கூடாரமாக மாறியது. வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்களும், குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், பூங்கா மற்றும் ஏரியை முறையாக பராமரிக்காததால், நடைபாதை பூங்கா பாழடைந்து, இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மறைமலை நகரை சுற்றியுள்ள சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட கிராமப்புற மக்களுக்கு, அருகில் பொழுதுபோக்கு தலங்கள் இல்லை.
எனவே, இந்த ஏரியை புனரமைத்து, படகு சவாரி மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தினால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நின்னக்கரை ஏரியை, மறைமலை நகர் நகராட்சியிடம் வழங்க வேண்டும் என, பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்த நகராட்சி நிர்வாகங்களின் கூட்டத்திலும், இந்த கோரிக்கை நகராட்சி சார்பில் முன்வைக்கப்பட்டது.
- நகராட்சி அதிகாரிகள்,
மறைமலை நகர்.
விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வெளியில் செல்ல, அருகில் எந்த இடமும் இல்லாததால், 15 கி.மீ., துாரத்தில் உள்ள வண்டலுார் உயிரியல் பூங்கா, சென்னை, மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. போக்குவரத்திலேயே பாதி நாள் சென்றுவிடுகிறது. போக்குவரத்துக்கும் கணிசமான தொகை செலவாகிறது. எனவே, நின்னக்கரை ஏரியில், படகு சவாரி போன்ற வசதிகளுடன் பூங்கா அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆ.ஜனனி,
இல்லத்தரசி,
மறைமலை நகர்.
மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் விதிகளை மீறி, நச்சுக்கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகளை, சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஏரியில் விடுகின்றன. இதன் காரணமாக, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரின் தன்மை மாறுகிறது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- ஜே.சார்லஸ்,
வழக்கறிஞர்,
மறைமலை நகர்.