/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்து புலனாய்வு பிரிவு கேளம்பாக்கத்தில் அமையுமா?
/
போக்குவரத்து புலனாய்வு பிரிவு கேளம்பாக்கத்தில் அமையுமா?
போக்குவரத்து புலனாய்வு பிரிவு கேளம்பாக்கத்தில் அமையுமா?
போக்குவரத்து புலனாய்வு பிரிவு கேளம்பாக்கத்தில் அமையுமா?
ADDED : செப் 05, 2024 07:51 PM
திருப்போரூர்:பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு கட்டுப்பாட்டில், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கானத்துார், சேலையூர், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளன.
இ.சி.ஆர்., சாலையில், அக்கரை முதல் கோவளம் அருகே செம்மஞ்சேரி வரையும், ஓ.எம்.ஆர்., சாலையில், கண்ணகி நகர் முதல் கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் வரையும் உள்ள பகுதிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு கட்டுப்பாட்டில் வருகின்றன.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில், ஒரு உதவி கமிஷனர், ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர்.
மேற்கண்ட காவல் நிலையங்களின் எல்லைக்குள், வாகன விபத்து நடந்து, வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, உயிர் சேதம் ஏற்பட்டாலோ, பள்ளிக்கரணையில் செயல்படும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தான் புகார் செய்ய வேண்டும் என்ற நிலை, தற்போது உள்ளது.
அங்கிருந்து போலீசார் வந்து, விபத்து நடந்தது எப்படி, விபத்திற்கு காரணம் யார் என்பது குறித்து ஆய்வு செய்து, புகைப்படங்களை எடுத்த பிறகே, வழக்கு பதிவு செய்து, வாகனம் சேதம் அடைந்ததற்கான சான்றிதழ் அல்லது உயிரிழப்புக்கான எப்.ஐ.ஆர்., போன்றவை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், போலீசாருக்கும் தேவையற்ற வீண் அலைச்சல், பணிச்சுமை, கால விரயம் ஏற்படுவதாக கருத்து எழுந்துள்ளது.
எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் போலீசாரின் சிரமத்தை தவிர்க்க, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உள்ள கானத்துார், தாழம்பூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களை பிரிக்க வேண்டும்.
பிரிக்கப்பட்ட காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு, கேளம்பாக்கத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உருவாக்கி, அதற்கான உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.