/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலைக்கு திடீரென ஆட்கள்...குறைப்பு!: 11 வாரங்களுக்கு சம்பள தொகை நிலுவை
/
100 நாள் வேலைக்கு திடீரென ஆட்கள்...குறைப்பு!: 11 வாரங்களுக்கு சம்பள தொகை நிலுவை
100 நாள் வேலைக்கு திடீரென ஆட்கள்...குறைப்பு!: 11 வாரங்களுக்கு சம்பள தொகை நிலுவை
100 நாள் வேலைக்கு திடீரென ஆட்கள்...குறைப்பு!: 11 வாரங்களுக்கு சம்பள தொகை நிலுவை
ADDED : மார் 07, 2024 12:45 AM
காஞ்சிபுரம்:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளர்களின் வருகை எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், நிலுவையில் உள்ள 11 வாரத்திற்குரிய சம்பள தொகை விரைவில் கிடைக்கும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.
இந்த ஊராட்சிகளில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் நபர்கள் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
இதில், 1.45 லட்சம் நபர்களுக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 70,000 பேர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 71,000 பேர் என, 1.81 லட்சம் பணியாளர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து நேற்று முன்தினம் வரையில், 11 வாரங்களுக்கு கூலி கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம், ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இதில், ஒவ்வொரு கிளஸ்டர் என அழைக்கப்படும் குழுவிற்கு, நான்கு பேர் மட்டுமே மார்ச் மாதம் முடியும் வரையில், 100 நாள் வேலைக்கு வர வேண்டும்.
அதற்கு ஏற்றவாறு, 100 நாள் தொழிலாளர்களின் வருகை எண்ணிக்கையை குறைத்து அனுப்ப வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.
இதுபோல செய்தால் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். பிறர் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இதை நம்பி இருக்கும் பலரின் குடும்பத்தினர் மாற்று வேலையை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என, பெண்கள் புலம்பி வருகின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,000 பேரில், 10,000 பேருக்கு மட்டுமே தொடர்ந்து வேலை கிடைக்கும். பிறர் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதேபோல தான் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
மாநில ஊரக வளர்ச்சி துறையில் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளோம்.
நிதி ஆண்டின் இறுதி மாதம் என்பதால், ஒரு குடும்பத்திற்கு, 100 நாள் நிறைவு பெற்றவர்கள் மற்றும் அதிக நாட்கள் பணிபுரிந்தவர்களை, மார்ச் மாதம் வர வேண்டாம் என, கூறியுள்ளோம்.
ஏப்ரல் மாதத்தில் துவங்கும் அடுத்த நிதி ஆண்டு முதல் அனைத்து பணியாளர்களும் வேலைக்கு வரலாம் என கூறியுள்ளோம். மேலும், நிலுவைத்தொகை, விரைவில் அவரவர் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வேலை வழங்கணும்
குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களுக்கு, 100 நாள் வேலை பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. திடீரென ஆள் குறைப்பு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. இருப்பினும், 100 நாள் வேலை வாய்ப்பு தடையின்றி வழங்க வேண்டும்.
- டி.சரண்யா, 30,
தோணாங்குளம்,
வாலாஜாபாத் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
சரியாக சம்பளம் வழங்குவதில்லை
ஒரு மாதத்திற்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை விடுத்து வருகின்றோம். மேலும், 40 பேரை மட்டும் வைத்து பணி செய்ய வேண்டும் என, வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக ஒன்றிய பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- எம்.ஜெஸிந்தா, 59,
பண்ணுார்,
கடம்பத்துார்,
திருவள்ளூர் மாவட்டம்.
அன்றாட வாழ்க்கை பாதிப்பு
நுாறு நாள் வேலை ஊதியத்தின் மூலம் அன்றாட வாழ்க்கையை கழித்து வருகிறேன். சில தினங்களுக்கு முன் ஒரு வாரத்திற்கான ஊதியம் மட்டும் வழங்கப்பட்டது. நிறுத்தி வைத்துள்ள மீதி 10 வார ஊதியத்தை வழங்க வேண்டும். இதனால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
- அ.கிருகம்பாள், 70,
அரசூர்,
செய்யூர்,
செங்கல்பட்டு மாவட்டம்.

