/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.188 கோடி ! 23 ஆண்டுகளுக்கு பின் பணிகள் துவக்கம்
/
செங்கை பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.188 கோடி ! 23 ஆண்டுகளுக்கு பின் பணிகள் துவக்கம்
செங்கை பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.188 கோடி ! 23 ஆண்டுகளுக்கு பின் பணிகள் துவக்கம்
செங்கை பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.188 கோடி ! 23 ஆண்டுகளுக்கு பின் பணிகள் துவக்கம்
ADDED : ஜன 07, 2024 11:24 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் 188.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. டெண்டர் விடும் பணியை, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் துவங்கியுள்ளதால், ௨௩ ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டம் உயிர் பெற்றுள்ளதாக நகரவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு முதல்நிலை நகராட்சியில், 6.09 ச.மீ., பரப்பளவில், 33 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 64,138 பேர் வசித்து வருகின்றனர்.
நகரில், 11,285 வீடுகள் உள்ளன. 61.467 கி.மீ., நீளம் சாலைகள் மற்றும் 62.67 கி.மீ., நீளத்தில் வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நகரில், ஜே.சி.கே. நகர், நத்தம், மேட்டுத்தெரு, பெரியணியக்கார தெரு. வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், குண்டூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 485 தெருக்கள் உள்ளன.
நகராட்சியின் மேற்கு பகுதி மேடாகவும், கிழக்கு பகுதியில் கொளவாய் ஏரி தாழ்வாகவும் அமைந்துள்ளது. மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, பல ஆண்டுகளாக மழைநீர் கொளவாய் ஏரிக்கு செல்கிறது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுவதால், கொசு உற்பத்தி பெருகி, நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர், கொளவாய் ஏரியில் கலந்து, அதன் உபரி நீர் பாலாற்றுக்கு செல்கிறது.
இதனால், இப்பகுதி முழுதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்புகளை தவிர்க்க, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, நீண்டகாலமாக அரசிடம் நகரவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
தமிழகத்தில், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 2001ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அப்போது இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின், 2019ம் ஆண்டு, நவ., 30ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிந்ததால், மாவட்ட தலைநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனால், நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 2020ம் ஆண்டு, பிப்., 27ம் தேதி, 194 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் அரசுக்கு அனுப்பினர்.
அதன்பின், அதே ஆண்டு, திருத்திய திட்ட மதிப்பீடாக, 165.44 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போதும் பணி துவக்கப்படவில்லை. அதனால், 2022ம் ஆண்டு செப்., மாதம், 220.74 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின், டிசம்பர் மாதம், சட்டசபையில், 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்கல்பட்டு நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தற்போது, பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 2023- - 24 நிதியாண்டில், 206.18 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அறிவிப்பு வெளியானது. தற்போது, திருத்திய மதிப்பீடாக, 188.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில், மத்திய அரசு துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில், 63 கோடி ரூபாயும், தமிழ்நாடு அர்பன் டெவலப்மென்ட் வங்கி கடன் வாயிலாக, 62.48 கோடி ரூபாயும், தமிழக அரசு 62.47 கோடி ரூபாயும் என, மொத்தம் 188.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இப்பணிகளை செயல்படுத்த, கடந்த டிச., 29ம் தேதி, நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், கொளவாய் ஏரி மற்றும் பாலாற்றில் கழிவுநீர் செல்வது முற்றிலும் தடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு, 45.௪௦ லட்சம் லிட்டர் கழிவுநீர், வடிகால்வாய்களில் செல்வது முற்றிலும் தடுக்கப்படும்.
இதனால், தனிமனித சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
எனவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 188.25 ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டத்தை செயல்படுத்த, நகரசபை அனுமதி அளித்துள்ளது. இப்பணிக்கு, 15 நாட்களில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.
- தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள்