/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 வயது சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 'போக்சோ'
/
5 வயது சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 'போக்சோ'
ADDED : மார் 14, 2024 11:14 PM

கோயம்பேடு:கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் நேற்று, சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த கருமலைச்சாமி, 62, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கருமலைச்சாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து அவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அதேபோல், திருநின்றவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, அரியலுார் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அருண்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். கடந்த ஓராண்டாக சிறுமியிடம், 1 சவரன் நகை, சிறுக சிறுக 50,000 ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், நடந்தவற்றை வெளியில் கூறினால், சிறுமியின் தாய், தம்பியை கொலை செய்து விடுவதாக அருண்குமார் மிரட்டிஉள்ளார்.
இது குறித்த புகாரை விசாரித்த பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த அருண்குமாரை, 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

