ADDED : செப் 30, 2024 06:46 AM

ஆவடி, : அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம் அணுகு சாலையில் குட்கா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்துார் போலீசார், புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டது, செங்குன்றம், கிராண்ட் லேண்ட் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 51, என தெரிந்தது. இவர், பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டார பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இவர் மீது, கூடுவாஞ்சேரி, குன்றத்துார், கவரைப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில், குட்கா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இருவர் கைது
அதேபோல், சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம், 70. போந்துார் கூட்டுச்சாலை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, நேற்று சூணாம்பேடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு, கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 40,000 ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் வெளியே, போந்துாரில் இருந்து மரக்காணம் பகுதிக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல இருந்த, 10 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
பின், ராமஜெயம், 70, மற்றும் மரக்காணம் பகுதியை சேர்ந்த விஜி, 40, ஆகிய இருவரை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.