/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் 65 ஏரிகள் நிரம்பின
/
செங்கை மாவட்டத்தில் 65 ஏரிகள் நிரம்பின
ADDED : அக் 29, 2025 10:53 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 65 ஏரிகள் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள், 2,512 குளங்கள் உள்ளன.
தற்போது, வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 57 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள எட்டு ஏரிகள், 25 குளங்கள், முழு கொள்ளளவு நிரம்பி, நேற்று தண்ணீர் வழிந்தது. நீர்நிலையை பாதுகாக்கும் பணியில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம் ஏரியில் ஆய்வு மதுராந்தகம் ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களில் கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைத்தல் உள்ளிட்ட பணிகள், 160 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
தற்போது, கலங்கல்கள் அமைத்து, தானியங்கி 'ஷட்டர்'கள் அமைக்கும் பணிகள் முடிந்ததால், நெல்வாய் மடு மற்றும் கிளியாற்றில் இருந்து வரும் 600 கன அடி தண்ணீர், விவசாய பயன்பாட்டிற்காக ஏரியில் தேக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், மதுராந்தகம் ஏரி சங்கத் தலைவர் குமார் மற்றும் விவசாயிகள், ஏரியை பார்வையிட்டனர். தற்போதைய, நிலவரப்படி ஏரியில் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.

