/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்; காஞ்சிபுரத்தில் ஓராண்டில் 69 பேர் கைது
/
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்; காஞ்சிபுரத்தில் ஓராண்டில் 69 பேர் கைது
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்; காஞ்சிபுரத்தில் ஓராண்டில் 69 பேர் கைது
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்; காஞ்சிபுரத்தில் ஓராண்டில் 69 பேர் கைது
ADDED : பிப் 18, 2025 03:49 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக, ஓராண்டில் 69 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுவது, குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசார், பெற்றோருக்கு கவலை மற்றும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதி பிரிந்து தனி மாவட்டம் ஆனதால், காஞ்சிபுரம் மாவட்டம் சிறிய எல்லை கொண்ட மாவட்டமாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போது இரண்டு மகளிர் காவல் நிலையம் உட்பட 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
புலன் விசாரணை
கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற பல்வேறு வகையான குற்ற சம்பவங்கள் நடந்தபடியே இருக்கிறது. இருப்பினும், விரைவாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
அதேபோல், கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்வோர் மீதும் போலீசார் தொடர் நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களில் பலரும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால், போலீசார் ஆச்சரியப்படுகின்றனர். அதேசமயம், குழந்தைகள் நல அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குற்ற சம்பவங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொறு ஆண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிறுவர்கள் ஈடுபட்ட குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, சிறுவர்களின் மனநிலை, அவர்களின் நட்பு வட்டாரம், போதை பொருள் பயன்பாடு போன்றவை, சிறார்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 69 சிறார்கள், பல்வேறு வகையான குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் சிறுவர்களை கையாள்வதற்கான சட்ட, விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால், போலீசாருக்கு சிறார்கள் செய்யும் குற்ற சம்பவங்களால் தலைவலி ஏற்படுத்துகிறது.
போதை பொருள் பயன்படுத்தும் சிறார்கள் நாளடைவில் போதை பொருள் விற்பனை செய்கின்றனர். இதையடுத்து, சிறிய திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அடுத்தகட்டமாக, வழிப்பறி, கொலை முயற்சி, கொலை போன்ற சம்பவங்களிலும் சிறார்கள் ஈடுபடுகிறார்கள்.
இன்றைய சமுதாய சூழலில், சிறார்களின் குற்ற சம்பவங்களால் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும், பெற்றோருக்கும் கவலையை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து காஞ்சி போலீசார் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறார்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. போலீசார் விசாரணையில் சிறார்களின் நட்பு வட்டாரம் மிக மோசமாக இருந்துள்ளது.
கண்காணிப்பு
பள்ளியிலேயே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் ஓரளவு தீர்வு கிடைக்கும். சிறு வயதிலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் மீது போலீசார் தொடர் கண்காணிப்பில் இருப்பர்.
ஒரு முறை குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறார்கள் பலருக்கு, குற்றவாளிகளின் தொடர்பு பெரிய அளவில் கிடைக்கிறது. சிறார் என்பதால், தண்டனை கிடையாது என நினைக்கின்றனர்.
ஆனால், குற்றம் நிருபிக்கப்பட்டால், கட்டாயம் தண்டனை வழங்கப்படும்.சிறு வயதிலேயே நீதிக்கதைகளும், ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இளைஞர் நீதி குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:
குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களுக்கு மன ஆலோசனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறார் பள்ளி மற்றும் கல்லுாரியில் படிப்பதாக இருந்தால், மீண்டும் அதே பள்ளி, கல்லுாரியில் சேர்க்க வழிவகை செய்கிறோம்.
பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோருக்கு குழந்தை நலம் சார்ந்த ஆலோசனையும், குடும்பத்தில் உள்ள சிக்கல் தவிர்ப்பது பற்றி நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.
போதைக்கு அடிமையான சிறார் எனில், அந்த சிறாரை செங்கல்பட்டில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து, சிறாரின் உடல் நிலை பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனநிலை ஆலோசனை யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களை மாவட்ட நன்னடத்தை அதிகாரி வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மேலும் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடாத வண்ணம், போதையின் தீமை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

