/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை நடுவே எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற இன்று அனைத்து கட்சி கூட்டம்
/
சாலை நடுவே எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற இன்று அனைத்து கட்சி கூட்டம்
சாலை நடுவே எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற இன்று அனைத்து கட்சி கூட்டம்
சாலை நடுவே எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற இன்று அனைத்து கட்சி கூட்டம்
ADDED : அக் 29, 2025 12:31 AM

சிங்கபெருமாள் கோவில்: ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்றுவது தொடர்பாக, அனைத்து கட்சி பிரதிநிதிகள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் அமைதி பேச்சு கூட்டம், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று நடக்கிறது.
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 2008ம் ஆண்டு, இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.
138.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பால பணிகள் துவக்கப்பட்டு, வேகமாக பணிகள் நடைபெற்று, கடந்த ஜூன் மாதம் மேம்பாலம் திறக்கப்பட்டது.
இங்கு, தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில், மேம்பாலம் இறங்கும் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை, சாலையின் நடுவே விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த சிலையை மாற்றியமைக்காமல் அல்லது சிலையை சுற்றி தடுப்புகள் அமைக்காமல் மேம்பாலம் திறக்கப்பட்டதால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
சிலையை அகற்ற வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு வட்டாட்சியர் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் அமைதி பேச்சு கூட்டம், இன்று காலை 11:00 மணியளவில், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எடுத்து, சிலையை அகற்றி மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

