/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
/
ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
ADDED : ஜன 16, 2025 12:23 AM
திருப்போரூர்,திருப்போரூரை அடுத்த கொட்டமேடு பகுதியில் தனியார் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் இரண்டு நாட்களுக்கு முன், மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றார். அப்போது போலீசார் ரோந்து பணியில் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு, மீண்டும் அதே ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடிக்க, அதே நபர் வந்துள்ளார்.
மையத்தின் வெளியே தலையில் ஹெல்மெட்டுடன் நீண்ட நேரமாக நின்று, ஆள் நடமாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பகுதியினர் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த நபரை பிடித்து வைத்து, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மர்ம நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அதில், பிடிபட்ட வாலிபர், சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகாவைச் சேர்ந்த சதீஷ்குமார், 28 என்பது தெரிந்தது.
இவர், தற்போது திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்து உள்ளார். அவருக்கு பல லட்சம் கடன் உள்ளது.
அதை அடைக்க கொள்ளை முயற்சிக்கு திட்டமிட்டுள்ளார். இரண்டு நாளுக்கு முன் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றவர் இவர்தான் என்பதும் உறுதியானது.
இதையடுத்து, அவரை திருப்போரூர் போலீசார் கைது செய்தனர்.