/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறவழிச்சாலை மேம்பாலத்தில் இறக்கி பயணியரை தவிக்கவிடும் பேருந்துகள்
/
புறவழிச்சாலை மேம்பாலத்தில் இறக்கி பயணியரை தவிக்கவிடும் பேருந்துகள்
புறவழிச்சாலை மேம்பாலத்தில் இறக்கி பயணியரை தவிக்கவிடும் பேருந்துகள்
புறவழிச்சாலை மேம்பாலத்தில் இறக்கி பயணியரை தவிக்கவிடும் பேருந்துகள்
ADDED : ஜன 27, 2025 11:16 PM

மறைமலை நகர்,செங்கல்பட்டு மாவட்டத்தின் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளான மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணிபுரியும் இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
அவர்கள், வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில், சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். வழிபாடு, சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.
இதேபோன்று, தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு, ஆன்மிக வழிபாட்டிற்கு வருகின்றனர்.
சுற்றுலா பகுதியான மாமல்லபுரத்திற்கும் வந்து செல்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக, செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழே, விழுப்புரம் கோட்ட நேரக் காப்பாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது.
இங்கு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்து நடத்துநர்கள், பேருந்தை நிறுத்தி கையொப்பமிட்டு செல்கின்றனர்.
ஆனாலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பெரும்பாலான பேருந்துகள், புறவழிச்சாலை பாலத்தின் கீழே செல்லாமல், பயணியரை பாலத்தின் மீதே இறக்கி விட்டு, பாலத்தின் மீது சென்று விடுகின்றன.
இதனால் முதியவர்கள், பெண்கள் என பலரும், பாலத்தில் இருந்து நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணியரை தனியாக இறக்கி விட்டுச் செல்வதால், ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, அனைத்து பேருந்துகளையும் பாலத்தின் கீழே நின்று செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பாலத்தின் கீழே பேருந்து நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

