/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...மும்முரம் : வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...மும்முரம் : வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...மும்முரம் : வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...மும்முரம் : வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
UPDATED : ஏப் 25, 2025 02:48 AM
ADDED : ஏப் 24, 2025 09:13 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, அரசு பள்ளிகளில் படித்தால் கிடைக்கும் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு பயன்களை மக்களிடம் வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
மாவட்டத்தில் 481 தொடக்கப்பள்ளி, 188 நடுநிலைப் பள்ளி, 65 உயர் நிலைப்பள்ளி, 80 மேல்நிலைப் பள்ளி என, மொத்தம், 814 பள்ளிகள் உள்ளன.
அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்களில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'அரசு பள்ளிகளில் வரும் 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் துவங்க வேண்டும்' என, பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்து, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அரசு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.
மற்ற பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோருக்காக, உரிய சேர்க்கை இடங்களை ஒதுக்க வேண்டும். புதிதாக சேரும் மாணவர்களின் விபரங்களை,'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களில், தொடக்கப் பள்ளிகளில், கடந்த மார்ச் 1ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மொத்தம், 4,493 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுட்டுமின்றி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கிராமங்களில் வீடு வீடாகவும், நகரப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இதற்காக, கிராமங்கள்தோறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மே மாதத்தில் இருந்து, முழு வீச்சில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது, அரசு பள்ளிகளில் மாணவர்கள் படித்தால், அரசு கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகளில் கிடைக்கும் முன்னுரிமை, வேலைவாய்ப்பில் கிடைக்கும் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு பயன்களை மக்களிடத்தில் வலியுறுத்த உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த மார்ச் 1ம் தேதி முதல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. 4,493 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களை அதிக அளவில் பள்ளிகளில் சேர்க்க, மே மாதத்தில் முழு வீச்சில், கிராமங்களில் வீடு வீடாகச் சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
- கற்பகம்,
முதன்மை கல்வி அலுவலர்,
செங்கல்பட்டு.