
அகற்றப்பட்ட மின் கம்பங்களை
மீண்டும் அமைக்க கோரிக்கை
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம்- - கொளத்துார் இடையே குடியிருப்புகள், வணிக கடைகள், மின் வாரிய அலுவலகம், வனத்துறை பகுதிகள் உள்ளன.
இச்சாலை வழியாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், சாலையோரத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி துாய்மைப்படுத்தும் பணிக்காக, நான்கு மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.
மீண்டும் மின் கம்பம் அமைக்காததால், மின் விளக்குகள் இல்லாமல் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
அதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து, மின் வாரியத்திற்கு மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மீண்டும் மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கே.விமல், மாம்பாக்கம்.
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையை
சீரமைக்க வலியுறுத்தல்
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, கூடுவாஞ்சேரி -சீனிவாசபுரம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகவும், மேடும் பள்ளமுமாகவும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால், சாலையின் இருபுறமும் சேதமடைந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர், பள்ளங்களில் நிலை தடுமாறி செல்கின்றனர்.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மணிமேகலை, கூடுவாஞ்சேரி.
காயரம்பேடு ஊராட்சி சாலையில்
தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
இந்த பகுதியில், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், அவற்றை கடக்கும் கனரக வாகனங்கள், மின் கம்பிகளில் உரசியபடி செல்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக, மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை அகற்ற வேண்டும்.
- எஸ். மீனாட்சி, காயரம்பேடு.
புறஞ்சேரி சாலை தரைப்பாலத்தில்
தடுப்புகளை சீரமைக்க வேண்டுகோள்
பவுஞ்சூர் அருகே புறஞ்சேரி - பரமேஸ்வரமங்கலம் கிராமங்களுக்கு இடையே செல்லும் தார்ச்சாலையில், ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் தரைப்பாலம் உள்ளது.
பாலத்தின் தடுப்புகள் சேதமடைந்து உள்ளதால், இரவு நேரத்தில், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், தரைப்பாலத்தில் உள்ள தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.
- நா.மூர்த்தி, பவுஞ்சூர்.
திருப்போரூர் ஆறுவழிச்சாலையில்
லாரியில் நீரேற்றும் 'பைப் லைன்'
திருப்போரூர்- - ஆலத்துார் இடையிலான ஆறுவழிச் சாலை, 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இச்சாலையில் தற்போது ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
காலை, மாலை நேரங்களில், திருப்போரூர்,காலவாக்கம், கண்ணகப்பட்டு, தண்டலம் பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்போரூரில் சாலையோரத்தில் கிணற்றிலிருந்து தனியார் டேங்கர் லாரிக்கு நீர் ஏற்றும் பைப் லைன் தனிநபரால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீரேற்றும் பைப் லைனால், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அதே நேரத்தில் பைப் லைன் வாயிலாக, டேங்கர் லாரிக்கு தண்ணீர் நிரப்ப சாலையோரம் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தனிநபர் அமைத்துள்ள பைப் லைனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர்.
பெயர்த்து மூன்று மாதமாகியும்
சாலை அமைக்காததால் ஆபத்து
மறைமலை நகர் கீழ்க்கரணை ஹவுசிங் போர்டு பிரதான சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
மூன்று மாதங்களுக்கு முன், புதிய சாலை அமைக்க பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. இது வரை புதிய சாலை அமைக்கப்படாததால், இரவில் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பூபதி, மறைமலை நகர்.

