/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் இணைப்பு முறைகேடு கலெக்டரிடம் புகார்
/
மின் இணைப்பு முறைகேடு கலெக்டரிடம் புகார்
ADDED : டிச 09, 2024 11:57 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. கலைஞர் கனவு இல்லம், இலவச வீட்டுமனை பட்டா, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை, தொழில் துவங்க வங்கி கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 354 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின், பள்ளி கல்வித்துறை சார்பில், லத்துார் ஊராட்சி ஒன்றிய உயர் நிலை, மேல்நிலை பள்ளி மாணவியர் 13 பேருக்கு, தனியார் நிறுவனம் வழங்கிய மிதிவண்டியை வழங்கினார்.
மின் இணைப்பு முறைகேடு:
அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், உமையாள்பரணிச்சேரி அமரன், என்பவர், கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் படப்பை, காட்டாங்கொளத்துார், நெம்மேலி ஆகிய பிரிவு மின்வாரிய அலுவலகங்களில், அரசுக்கு சொந்தமான இடங்களில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி உள்ளவர்களுக்கு, மின் இணைப்பு வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, மின்வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.