/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றில் பைப்லைன் அமைக்கும் பணி...மந்தம் !:கோடைக்குள் குடிநீர் வழங்குவதில் சிக்கல்
/
பாலாற்றில் பைப்லைன் அமைக்கும் பணி...மந்தம் !:கோடைக்குள் குடிநீர் வழங்குவதில் சிக்கல்
பாலாற்றில் பைப்லைன் அமைக்கும் பணி...மந்தம் !:கோடைக்குள் குடிநீர் வழங்குவதில் சிக்கல்
பாலாற்றில் பைப்லைன் அமைக்கும் பணி...மந்தம் !:கோடைக்குள் குடிநீர் வழங்குவதில் சிக்கல்
ADDED : மே 01, 2024 01:09 AM

செங்கல்பட்டு:பழவேலி பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து, பைப்லைன் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. அதனால், கோடை காலத்திற்குள் செங்கல்பட்டு நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சிக்கு, பழவேலி, மாமண்டூர் பாலாற்றிலிருந்து, ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய்கள் வாயிலாக, தலைமை நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.
அதன்பின், நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்படுகிறது.
பாலாற்று குடிநீர் மற்றும் கிணறுகள் வாயிலாக, 45 லிட்டர் தண்ணீர், நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 80,000த்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள், கேபிள்கள் அடித்துச் செல்லப்படுகின்றன.
அப்போது, குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால், நகராட்சிக்கு குழாய்கள், கேபிள் மாற்ற ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்யப்படுகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள், கேபிள்கள் அடித்து செல்லப்படுவதை தடுக்கவும், கூடுதல் குடிநீர் வழங்கவும், நகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியது.
அதன்பின், குடிநீர் பணிக்காக, மூலதன மானிய நிதி 2022- - 23ம் நிதியாண்டில், 7.60 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
பின், பழவேலி பாலாற்றில், புதிய ஐந்து நீர் ஆதார கிணறுகள் மற்றும் தலா இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டவும், பாலாற்றில் 4 கி.மீ., நீளம், 18 அடி ஆழத்திற்கு இரும்பு துாண்கள் அமைத்து, பைப்லைன், கேபிள்கள் அமைக்க, பணி உத்தரவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி, பாலாற்றில் புதிதாக ஐந்து கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. அதன்பின், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது.
இப்பணிகளை முடித்து, கோடை காலத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், பணிகள் மந்தமாக நடைபெறுவதால், கோடை காலத்தில் குடிநீர் வழங்குவது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, நகரவாசிகள் நலன் கருதி, பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி பகுதியில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் குடிநீர் வழங்க, பாலாற்றில் புதிய கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. அப்பணிகளை விரைவில் முடித்து, கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கோட்டீஸ்வரன்,
சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.